ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடாமல் போனது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன! வெளியான பரபர தகவல்
டெல்லி: பிரியங்கா காந்தி இந்த முறை அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அங்கு போட்டியிடவில்லை.. இதற்கான காரணம் என்ன என்பது இப்போது வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், 5 கட்ட வாக்குப்பதிவு வரும் நாட்களில் நடைபெற உள்ளது.

இதில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பதில் சஸ்பென்ஸ் நிலவி வந்தது.
வேட்பாளர்கள்: இந்தச் சூழலில் இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் காங்கிரஸ் கட்சி இன்று காலை அறிவித்தது. ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமேதி தொகுதியில் கேஎல் ஷர்மா களமிறங்குகிறார். இந்த இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என முதலில் கூறப்பட்டது. இருப்பினும், வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இதற்கிடையே ஏன் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடுமாறு பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும், பிரியங்கா காந்தி போட்டியிட மறுத்துவிட்டாராம்.
என்ன காரணம்: ஏனென்றால் ஏற்கனவே அவரது தாயார் சோனியா காந்தி ராஜ்யசபாவில் எம்பியாக இருக்கிறார். அதேபோல ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இந்தச் சூழலில் பிரியங்கா காந்தியும் போட்டியிட்டு வென்றால் நேரு குடும்பத்தில் இருந்து மட்டும் 3 எம்பிக்கள் என்ற சூழல் உருவாகும். அப்படி நடந்தால் மீண்டும் குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டை பாஜக கையில் எடுக்கும் என்பதற்காகவே பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் நிர்வாகிகள்: இருப்பினும் சில காங்கிரஸ் தலைவர்கள் அவர் போட்டியிட்டு இருந்தால் காங்கிரஸுக்கு ஒரு பூஸ்ட்டாக அமைந்திருக்கும் என கருதுகிறார்கள். ஏனென்றால் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாகத் தாலி குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துகளுக்குப் பிரியங்கா காந்தி தான் பதிலடி கொடுத்திருந்தார். இதனால் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் அது காங்கிரஸுக்கு பலனையே கொடுத்து இருக்கும் என்பது அவர்கள் கருத்து.
காங்கிரஸ்: காங்கிரஸைப் பொறுத்தவரை அவர்கள் உபி மாநிலத்தில் உள்ள இந்த இரு தொகுதிகளுக்கு நீண்ட தாமதத்திற்கு பிறகே வேட்பாளர்களை அறிவித்தனர். ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் ரேபரேலியில் களம் காண்கிறார். அமேதியில் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக அறியப்படும் கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் தேர்வு செய்தது. ரேபரேலியில் சோனியா காந்தியின் பிரதிநிதியாக இருந்த இந்த கேஎல் ஷர்மா தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வரும் மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் ரேபரேலியில் பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி போட்டியிடுகிறார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்தி அமைச்சர் ஸ்மிருதி ரானி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு வாய்ப்பு: ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயம் வெல்வார் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகிறார்கள். அமேதியைப் பொறுத்தவரை, சர்மா அடிமட்டத்தில் இருந்து வந்தவர் என்பதாலும் ஸ்மிருதி ராணி மீது அதிருப்தி இருப்பதாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications