வக்பு சட்டம்.. "விரிவான விசாரணை தேவை.." தலைமை நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பிக்காதது ஏன்?
டெல்லி: மத்திய அரசின் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா புதிதாக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டார். அவர் ஏன் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க மறுத்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலும் அளித்தார். இதனால் அந்த மசோதா சட்டமாக மாறியது. இதற்குக் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வக்பு சட்டம்
பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 70க்கும் மேற்பட்ட மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. முன்னதாக இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, வக்பு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மே 5ம் தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
என்ன காரணம்
இதற்கிடையே இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இருப்பினும், தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு 4 வேலை நாட்கள் மட்டுமே இருப்பதைச் சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் ஏற்கனவே உள்ள இடைக்கால உத்தரவுகளை ஒத்திவைக்கவோ அல்லது பிறப்பிக்கவோ விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார். இதனால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு அடுத்த விசாரணை வரை தொடர்கிறது.
யார் விசாரிப்பார்
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நீதிபதி பி.ஆர். கவாய் இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா குறிப்பிட்டார். இந்த வழக்கு வரும் மே 15ம் தேதி நீதிபதிகள் கவாய், சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடந்தது. அப்போதும் கூட வக்பு வாரிய திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கத் தலைமை நீதிமன்ற அமர்வு தவித்துவிட்டது. அதற்குப் பதிலாக, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு (மே 5) வரும் வரை, வக்பு வாரிய சட்டத்தின் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடக்கூடாது என்றும். தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
விரிவான விசாரணை தேவை
அதேபோல மத்திய அரசும் மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களுக்கு முஸ்லிம் அல்லதாவார்களை நியமனம் செய்யாது என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் இன்று மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுவதால் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க விரும்பவில்லை என்று தலைமை நீதிபதி கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications