ட்விஸ்ட்.. சந்திரபாபு நாயுடு வழக்கு விசாரணையில் இருந்து விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி! பின்னணி இதுதான்
டெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்மீதான திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கும் நிலையில் நீதிபதி எஸ்விஎன் பாட்டி திடீரென விலகி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராகவும் இருப்பவர் சந்திரபாபு நாயுடு. இவர் முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ரூ.371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவர் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வந்தனர். விரைவில் சந்திரபாபு கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியானது. இதையடுத்து கடந்த மாதம் 9 ம் தேதி சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவின் கைதால் அவரது கட்சியினர் கொதித்து போயினர். ஆந்திரா முழுவதும் போராட்டத்தை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நீதிமன்றத்தில் சந்திரபாபு ஆஜர்ப்படுத்தப்பட்டார். அதன்பிறகு அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரபாபு ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடியானது.
இதையடுத்து இன்று மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் சந்திரபாபு நாயுடு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு என்பது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதி எஸ்விஎன் பாட்டி அடங்கிய அமர்வில் பட்டியலிடப்பட்டது.
இந்நிலையில் தான் வழக்கு விசாரணைக்கு முன்பே அதில் இருந்து விலகுவதாக எஸ்விஎன் பாட்டி கூறினார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையில் இருந்து விலகினார். நீதிபதிகளை பொறுத்தமட்டில் ஒரு குறிப்பிட்ட வழக்கில் இருந்து விலகி கொள்வதற்கான உரிமை உள்ளது. இதற்கு முன்பும் பல நீதிபதிகள் தங்கள் முன்பு பட்டியலிடப்பட்ட வழக்குகளில் இருந்து விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications