தடுப்பூசிக்கு மிக குறைந்த வரி..முழு விலக்கு அளித்தால் விலை உயரும் அபாயம்..நிர்மலா சீதாராமன் விளக்கம்
டெல்லி: தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து மருந்துவ பொருட்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து முழு வரி விலக்கு அளிக்கப்பட்டால், தடுப்பூசி உற்பத்தி செய்யும் மருந்து நிறுவன்களால் தங்கள் உள்ளீட்டு வரிகளை ஈடுசெய்ய முடியாது என்றும் இதனால் தடுப்பூசி விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் உதவும் வகையில் மருத்துவ உபகரணங்கள், மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி, சுங்க வரி உள்ளிட்ட வரிகளிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டரில், செஞ்சிலுவைச் சங்கம் மூலம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா நிவாரணப் பொருட்கள் அனைத்திற்கும் சுங்க வரி உள்ளிட்ட அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் ரெம்டெசிவிர், ரெம்டெசிவிர் மூலப்பொருள்கள், ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், மாஸ்க்குகள் உள்ளிட்டவற்றுக்கும் முழு வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை எந்தவொரு நிறுவனமும் இறக்குமதி செய்யும்போது முழு வரி விலக்கு அளிக்கப்படும்.
தற்போது கொரோனா மருந்துகள் மீது 5% ஜிஎஸ்டி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது 12% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான தொகை மாநில அரசுகளுக்குத் தான் செல்கின்றன.
சொல்லப்போனால் பெயரளவு மட்டுமே 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இந்தப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு வரி விலக்கு அளிக்கப்பட்டால், தடுப்பூசி உற்பத்தி செய்யும் மருந்து நிறுவன்களால் தங்கள் உள்ளீட்டு வரிகளை ஈடுசெய்ய முடியாது. இதனால் தடுப்பூசி விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அந்த சுமையும் கடைசியில் பொமக்களுக்கே செல்லும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications