அப்போது மகள்கள்! ஆனால் இப்போது? பிரதமர் மோடி, ஜனாதிபதியை விமர்சித்த மல்யுத்த வீராங்கணை! பரபரப்பு
டெல்லி: மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யாததை கண்டித்து வீரர், வீராங்கணைகளை கங்கை ஆற்றில் பதக்கங்களை வீசி எறிய முடிவு செய்தனர். இதன் பின்னணி பற்றியும் மல்யுத்த வீராங்கணை சாக்சி மாலிக் உருக்கமாக தெரிவித்துள்ளதோடு, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக எம்பியாக இருக்கிறார். இவர் மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தபோது மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தன.

இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என ஒரு மாதத்துக்கும் மேலாக மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் போராட்டத்தை தொடங்கினர்.
இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்தது. கடந்த 28 ம் தேதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நியாயம் கேட்டு பேரணி புறப்பட்ட வீரர், வீராங்கணைகளும் தடுத்து நிறுத்தப்பட்டு தரதரெவென இழுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்தியா முழுவதும் மல்யுத்த வீரர், வீராங்கணைகளின் கைது நடவடிக்கை விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. மேலும் டெல்லி போலீசாரும் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவில்லை. இதற்கிடையே தான் மல்யுத்த வீரர், வீராங்கணைகள் தாங்கள் வென்ற பதக்கங்களை ஹரித்வார் கங்கை ஆற்றில் வீசி எறிந்து எதிர்ப்பை காட்ட முயன்றனர். மேலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து கங்கை நதியில் பதக்கங்களை வீச பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், விஜேஷ் போகத் உள்பட பிற மல்யுத்த வீரர், வீராங்கணைகள் வந்தனர். அவர்கள் கங்கை ஆற்றின் கரையோரம் இருந்து கதறி அழுதனர். தங்களுக்கு ஆதரவாக யாரும் வரவில்லையே என நினைத்து தேம்பி தேம்பி அழுதனர். இதையடுத்து விவசாய சங்க தலைவர் நரேஷ் தியாகத் வந்து 5 நாள் அவகாசம் வழங்கும்படி கேட்டு பதக்கங்களை பெற்று கொண்டார். இதையடுத்து வீரர், வீராங்கணைகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே தான் கங்கையில் பதக்கங்களை வீசி எறிய முடிவு செய்தது ஏன்? என்பது பற்றி மல்யுத்த வீராங்கணை சாக்சி மாலிக் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛சர்வேதேச போட்டிகளில் பதக்கம் வென்றபோது தனது வீட்டு மகள்கள் என பிரதமர் மோடி அழைத்தார். ஆனால் இபு்போது எங்களின் போராட்டம் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. மேலும் ஒரு பெண்ணாக இருந்தாலும் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வீராங்கணைகளின் போராட்டம் பற்றி ஜனாதிபதியும் கவலைப்படவில்லை.
நீதி கேட்டு போராடும் எங்களை பற்றி கவலைப்படாத பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பதக்கங்களை நாங்கள் தர விரும்பவில்லை. இதனால் தான் கங்கையில் வீசி எறிய முடிவு செய்துள்ளோம்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications