பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு கட்டாய ஓய்வு தரும் பாஜக? புதிய பிரதமரா உ.பி. யோகி? பரபரக்கும் டெல்லி!
டெல்லி: பிரதம நரேந்திர மோடிக்கு 75-வது வயதில் அரசியலில் இருந்து கட்டாய ஓய்வைத் தரப் போகிறதா பாஜக என்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து நாட்டின் புதிய பிரதமராக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்கிற விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்தியா டுடே கருத்தரங்கம் ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு யோகி ஆதித்யநாத் விளக்கமும் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜகவில் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 75 வயதை எட்டிய மூத்த தலைவர்கள் பலருக்கும் அரசியலில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானிக்கும் இந்த நிலைமைதான் ஏற்பட்டது. அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தை தீவிரமாக முன்னெடுத்த மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கும் இந்த கதிதான் ஏற்பட்டது. இதேபோல பல்வேறு மாநிலங்களிலும் 75 வயதான பாஜக தலைவர்கள் தீவிர அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மோடி பதவி- கெஜ்ரிவால் வீசிய 'வெடிகுண்டு'
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும் இது தொடர்பான விவாதம் தீவிரமாக நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தை முதலில் எழுப்பினார். அதாவது, பிரதமர் நரேந்திர மோடிக்கு 2026-ம் ஆண்டு 75 வயதாகும்; அப்போது அவரை பாஜக பிரதமராக நீடிக்க அனுமதிக்காது; மத்தியில் பாஜகவை தேர்ந்தெடுத்தால் பிரதமர்கள் மாற்றப்படும் நிலைமைதான் உருவாகும் என பிரசாரம் செய்தார்.
பாஜக அவசரமாக மறுப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடி பிரசாரம் பாஜகவை கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பாஜக தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு மட்டும் 75 வயது கட்டாய ஓய்வில் இருந்து விலக்கு அளிப்போம் என இடைவிடாமல் பதிலளித்தனர்.
இந்தியா டுடே கருத்தரங்கம்
இந்த நிலையில் இந்தியா டுடே ஊடகம், கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவரிடம், உத்தரப்பிரதேச முதல்வர் பதவிக்கு அப்பால், தேசிய அரசியலில் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா? அதாவது பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னர் புதிய பிரதமராவீர்களா? என்று மறைமுகமாக கேள்வி கேட்கப்பட்டது.
மழுப்பலான பதிலளித்த யோகி ஆதித்யநாத்
இதற்கு பதிலளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாரத மாதாவுக்கு சேவகனாக இருக்கிறேன்; உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு சேவையாற்றுவதற்கு எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடமையை மட்டும் நான் செய்து கொன்டிருக்கிறேன். நான் மீண்டும் என்னுடைய கோரக்பூருக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால் யோகி தர்மத்தை முன்னெடுத்துச் செல்வேன்; நான் பிற பதவிகளை விட (பிரதமர் பதவி) கோரக்பூருக்கு திரும்பிச் செல்வதுதான் உற்சாகம் தரக் கூடியதாக இருக்கும் என்று பட்டும் படாமல் பதிலளித்தார்.
புதிய பிரதமர் வாய்ப்பு யாருக்கு?
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக, அவரது 75-வது வயதில் கட்டாய ஓய்வு அளிக்கும் முடிவை மேற்கொண்டால் புதிய பிரதமராகக் கூடிய பட்டியலில் யோகி ஆதித்யநாத், நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களில் ஒருவரையே பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம், புதிய பிரதமராக தேர்வு செய்யும்.












Click it and Unblock the Notifications