இனி அணுகுண்டு பிளாக்மெயில் வேலைக்கு ஆகாது.. பதிலடி கடுமையாக இருக்கும்! பிரதமர் மோடி திட்டவட்டம்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல்முறையாக இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது இனி எந்த அணு ஆயுத மிரட்டலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அணு ஆயுத மிரட்டல் வேலைக்கு ஆகாது என்றும் தெரிவித்தார். மேலும், இனி தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் அரசியல் தலைவர்களையும் தனித்தனியாகப் பார்க்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் இருந்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்க முடியாத பாகிஸ்தான், இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியாவும் தக்கப் பதிலடி கொடுத்தது. முக்கியமான ஏர் பேஸ்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறி பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

பிரதமர் மோடி உரை
பொதுமக்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதால் இந்தியா அந்த அழைப்பை ஏற்றது. அதைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும்.
அணு ஆயுத மிரட்டல் வேலைக்கு ஆகாது
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராக இருந்தது.. ஆனால் பாகிஸ்தானை அதன் மார்பில் குத்திவிட்டது. இனி எந்த அணு ஆயுத மிரட்டலையும் பொறுத்துக்கொள்ள முடியாது. உங்களின் அணு ஆயுத மிரட்டல் வேலைக்கு ஆகாது" என்றார்.
இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அதற்கான பதில் மிக வலிமையானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தற்போது ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கினால் அதற்குத் தக்கப் பதிலடி தரப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினருக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
சர்வதேச தீவிரவாதம்
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பாகிஸ்தானைத் தாக்கியபோது பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் தைரியமும் துணிச்சலும் கூட நடுங்கியது என்றே சொல்ல வேண்டும். பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத தளங்கள் சர்வதேச பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடங்கி உலகின் பல்வேறு பெரிய பயங்கரவாத தாக்குதல்களும் இந்த இடத்திற்கும் தொடர்பு இருந்தன. அதை இந்தியா அழித்துள்ளது.
இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ.. அங்கெல்லாம் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
இனி தனித்தனியாகப் பார்க்க மாட்டோம்
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசையும் பயங்கரவாதத் தலைவர்களையும் நாங்கள் தனித்தனியாகப் பார்க்க மாட்டோம். ஆபரேஷன் சிந்தூர் போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பாகிஸ்தானின் மோசமான முகம் அப்போது உலகிற்குத் தெரிய வந்தது. அரசு ஆதரவில் தீவிரவாதம் செயல்படுகிறது என்பதற்கு இதுவே மிகப் பெரிய சான்று" என்றார்.












Click it and Unblock the Notifications