இந்தியாவில் பரவும் ஓமிக்ரான் புதிய வேரியண்ட் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? நிபுணர் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் நீடித்த விளைவை ஏற்படுத்தக் கூடும் என ஹார்வார்டு பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு சக்தி துறை நிபுணர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸை முழுவதுமாக நீக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 99 ஆயிரத்து 73 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,73,70,971 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 665 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இம்மாதம் 21-ம் தேதி 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
90 வயசில் இதெல்லாம் தேவையா.. நச்சென விளக்கம் சொல்லி.. பத்மஸ்ரீ விருதை நிராகரித்த பிரபல பாடகி
ஓமிக்ரான்
கடந்த 24 மணி நேரத்தில் 59 லட்சத்து 50 ஆயிரத்து 731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 163.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஓமிக்ரான் பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இந்தியாவில் ஓமிக்ரானால் 4000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமிக்ரான்
கொரோனாவை வெல்ல தடுப்பூசியே சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அது போல் ஓமிக்ரானுக்கு தடுப்பூசி கட்டுப்படாவிட்டாலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறைந்த அளவிலான பாதிப்பையே கொடுக்கிறது என கூறுகிறார்கள். இந்த கொரோனா வைரஸ் வரும் மார்ச் மாதம் முடிவுக்கு வரும் என பல மருத்துவ விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள்.
கொரோனாவை ஒழிக்க முடியாது
இந்த நிலையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி துறையின் நிபுணர் டாக்டர் சிவபிள்ளை கூறுகையில் கொரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. ஆனாலும் தடுப்பூசிகளும் மாத்திரைகளும் சில ஆண்டுகளில் இந்த நிலையை மாற்றும் என நம்பலாம். இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஓமிக்ரான் நீடித்த விளைவை ஏற்படுத்தக் கூடும்.
லேசானதா
இந்தியாவில் ஓமிக்ரானின் புதிய பிறழ்வான BA.2 பரவி வருகிறது. இது ஓமிக்ரானிலிருந்து வேறுபட்டது. இன்னும் சொல்ல போனால் ஓமிக்ரான் BA.1 தான் அசல். ஆனாலும் இது சற்று வித்தியாசமானது. BA.1 தான் ஓமிக்ரானின் முதல் வெர்ஷன். இதன் மூலம் பெறப்படும் நோய் எதிர்ப்பாற்றல், BA.2 எனும் இரண்டாவது வெர்ஷனை எதிர்த்து போராட உதவும். ஆனால் இந்த BA.2 லேசான பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேட்டால் அது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.
இந்தியாவில் பரவுவது எது
இந்தியாவில் BA.2 தான் அதிகமாக பரவி வருகிறது. இதுதான் பொதுவான பரவலாக இருந்து வருகிறது. அது போல் தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவிலும் BA.2 பாதிப்புகள் அதிகம்தான். ஆனால் BA.1- க்கு மாற்று BA.2 வா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என மற்ற விஞ்ஞானிகளின் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் சில நேரங்களில் வைரஸை முற்றிலும் ஒழிக்க முடியாமல் அது சில நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும். ஆனாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே தடுப்பூசிகளும் மருந்துகளும் நிச்சயம் நல்லது செய்யும். நம்பிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.