மூச்சு முட்டுது.. முடிந்தவரை வீட்டிலேயே பணிபுரியுங்கள்.. டெல்லி சுகாதாரத்துறை வேண்டுகோள்.. என்னாச்சு
டெல்லியில் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
டெல்லி: டெல்லியில் வாகன மாசுபாட்டை குறைப்பதற்காக, முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என்று தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம் இந்தியாவை பொறுத்தவரை எந்த நகரமும் உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை எட்டவில்லை. குறிப்பாக வட இந்தியாவில் காற்றின் தரம் மிக மோசமாகவே இருக்கிறது..
தொடர்ந்து இப்போதும், உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக நம் டெல்லி திகழ்கிறது.. இந்த மாசு அளவீடானது, வருடா வருடம் உயர்ந்துகொண்டே செல்கிறது..

கலக்கம்
காற்று மாசின் அளவு, உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வரம்புகளை விடக் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக உள்ளதாம். அதனால்தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது... அப்படியே மீறி வெடித்தாலும், ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் வார்னிங் தரப்பட்டது.. கடைசியில் பார்த்தால், தீபாவளி நாளில், உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூரும் பதிவாகியிருந்தது வேதனையையும், கலக்கத்தையும் தந்தது..

கூளங்கள் - குப்பைகள்
இது ஒருபக்கம் என்றால், குளிர்காலங்களில் டெல்லியில் அதற்குமேல் மாசு படிந்துவிடுகிறது.. பொதுவாக குளிர் காலங்களில் டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் முடிந்த போகத்தின் விவசாய குப்பைகளை எரித்துவிட்டு அடுத்த விதைத்தலுக்கு நிலத்தை ஏற்பாடு செய்வார்கள்.. இந்த எரித்தல் சம்பவங்களால், காற்றில் ஏற்படும் மாசு, காற்றின் சுழற்சியில் தலைநகர் டெல்லி வரை பரவுகிறது.. அதனால், ஏற்கனவே அதிகரித்துள்ள வாகனப் பயன்பாட்டால் உண்டாகும் புகையோடு, இந்த புகையும் குளிர்கால பனியோடு இணைந்து smog எனப்படும் மாசு கலந்த அடர் பனியாக உருமாறி விடுகிறது. இந்த அடர் மாசு பனியால் மக்களுக்கு சுவாச பிரச்சனைகள் வருவதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது...

அடர்பனி
டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்காக, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், காற்று மாசால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி கொண்டிருக்கிறது.. இது தொடர்பாக தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது... எனினும், டெல்லியை பொறுத்தவரை, இன்று பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின் தரக்குறியீடு அளவு 406 என்றுள்ளது.. இதனால் டெல்லி, காற்று மாசு அளவீடுகளில் 039 கடுமையான பிரிவில் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஸ்கூல் லீவு
அதேபோல, இந்தியாவிலேயே குளிர் காலத்தில் ஏற்படும் இந்த அடர் பனி காரணமாகவே, பள்ளிகளுக்கும், ஆபீஸ்களுக்கும் விடுமுறை அறிவிப்பது டெல்லி அரசு தான்... அதன்படி, குளிர்காலத்தில் ஏற்படும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க நவம்பர் 1, 2022 முதல் பிப்ரவரி 28, 2023 வரை நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவது தடை செய்யப்படும் என்று டெல்லி அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

திடீர் அறிவிப்பு
இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. டெல்லி சுற்றுப்புற சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, "வாகன மாசுபாட்டை குறைக்க, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்.. மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்... அரசியல் மூலம் இந்த காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது... எனவே, காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் திட்டம் உத்தரபிரதேசம், அரியானாவிலும் செயல்படுத்தப்பட வேண்டும்... இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது... விவசாயிகளை துன்புறுத்துவதையும், துஷ்பிரயோகம் செய்வதையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications