ஆந்திரா: சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு எதிராக டெல்லியில் ஜெகன் போராட்டம்- கை கோர்த்த அகிலேஷ் யாதவ்!
டெல்லி: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது; சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது; ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரான முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி போராட்டம் நடத்தி வருகிறார். இந்தப் போராட்டத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது ஜந்தர் மந்தரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீதான தாக்குதல் படங்களை அகிலேஷ் யாதவுக்கு விவரித்தார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஆந்திராவில் முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ்- இடதுசார்கள், தெலுங்குதேசம்-பாஜக- ஜனசேனா ஆகியவை களம் கண்டன.

ஆந்திரா லோக்சபா தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியது. ஆந்திராவின் முதல்வராக மீண்டும் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றது முதலே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள் தாக்குதலுக்குள்ளாகின. ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் சட்டவிரோதமான கட்டுமானங்கள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பல இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது; ஆந்திராவில் உடனே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தர்ணா போராட்டத்தையும் ஜெகன் மோகன் ரெட்டி நடத்தி வருகிறார். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜந்தர் மந்தரில் புகைப்பட கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அலுவலகங்கள், தலைவர்கள் வீடுகள் தாக்கப்பட்ட படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி ஜந்தர் மந்தருக்கு சென்று ஜெகன் மோகன் ரெட்டியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசின் அடக்குமுறைகளை அகிலேஷ் யாதவிடம் விவரித்தார் ஜெகன் மோகன் ரெட்டி.












Click it and Unblock the Notifications