பஞ்சாப் முதல்வராகும் பகவந்த் மான்? காங். கட்சிக்கு மோசமான தோல்வி! ஜீ நியூஸ் போஸ்ட் போல் சர்வே
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக ஜீ நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பஞ்சாபில் மொத்தம் 71.95% வாக்குகள் பதிவாகி இருந்தது.
பஞ்சாபில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ள நிலையில், வரும் மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது போஸ்ட்போல் சர்வேக்கள் வெளியாகி வருகிறது

ஆம் ஆத்மி வெற்றி
தற்போது வரை கிட்டதட்ட அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியே வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜீ நியூஸ் கருத்துக் கணிப்பிலும் ஆம் ஆத்மி 52-61 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 26-33 இடங்களிலும், அகாலி தளம் 24-32 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக அமரிந்தர் சிங் கூட்டணி 3-5 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது.

வாக்கு சதவிகிதம்
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி 39% வாக்குகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 25% வாக்குகளையும் அகாலி தளம் 24% வாக்குகளையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பாஜக கூட்டணி 6% வாக்குகளையும் இதர கட்சிகள் 6% வாக்குகளையும் பெறும் என்று ஜீ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராந்திய வாரியாக
பஞ்சாப் மாநிலத்தில் மால்வா, மஜா, தோபா என மொத்தம் 3 பிராந்தியங்கள் உள்ளது. அதில் மால்வா பிராந்தியத்தில் அதிகபட்சமாக ஆம் ஆத்மி 38-42 இடங்களிலும் காங், 12-16 இடங்களிலும், அகாலி தளம் 10-14 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மஜா பிராந்தியத்தில் ஆம் ஆத்மி 11-15 இடங்களிலும் காங். அகாலி தளம் இரண்டும் தலா 5-8 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. அதேபோல தோபா பிராந்தியத்தில் காங், 9-10 இடங்களிலும் ஆம் ஆத்மி 3-5 இடங்களிலும் அகாலி தளம் 8-10 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக ஜீ நியூஸ் போஸ்ட் போல் சர்வேவில் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் தேர்தல்
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 59 இடங்கள் தேவை, கடந்த தேர்தலை கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் சந்தித்த காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. பஞ்சாப் தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கிய ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடும் போட்டி
இருப்பினும், கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி வென்ற 20 இடங்களில் 18 மால்வா என்ற பகுதியில் இருந்து மட்டுமே வந்தது. எனவே, இந்த முறை ஆளும் கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு ஆம் ஆத்மியால் வெல்ல முடியுமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்! தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் ஆம் ஆத்மி அதிக இடங்களைக் கைப்பற்றி, தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications