'ஆவேச பேச்சு..' தர்மபுரி நாம் தமிழர் மேடையில் ஏறிய திமுகவினர்.. சேர்கள், மைக்குகள் பறந்தன
தர்மபுரி: தமிழக முதல்வரையும் திமுகவினரையும் மோசமாகப் பேசிய நாம் தமிழர் போராட்ட மேடையில் ஏறிய திமுகவினர், பேச்சை நிறுத்தும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட பல ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர்.
இதில் பேரறிவாளனுக்கு மட்டும் மருத்துவ காரணங்களால் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாத இறுதி முதல் அவருக்குத் தொடர்ச்சியாக பரோல் வழங்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் போராட்டம்
இந்நிலையில், ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும், இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் மொராப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார்.

ஆவேச பேச்சு
இக்கூட்டத்தில் அவர் திமுக அரசை மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த திமுகவினர் பேச்சை நிறுத்தும்படி மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மேடையில் நாம் தமிழர் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சேர், மைக்குகள் பறந்தன
அப்போது மேடையில் இருந்து மைக் கீழே தள்ளிவிடப்பட்டது. மேலும், மேடையிலேயே இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கீழே இருந்து சேர்களும் மேடையை நோக்கி வீசப்பட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மொராப்பூர் போலீசார், இந்த மோதல் சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.

பாதியில் ரத்தான கூட்டம்
இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் கூட்டம் பாதியிலேயே ரத்தானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் வீடியோ
இந்த வீடியாவை வேலூர் திமுக ஐ.டி. விங்கைச் சேர்ந்த ஒருவரும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "தருமபுரியில் திமுக வேண்டுமானால் தேர்தலில் தோற்று இருக்கலாம். தொண்டனின் பல வருடங்களுக்குப் பிறகு பழைய வீரத்தைப் பார்த்த மகிழ்ச்சி. தருமபுரி மொராப்பூரில் நாம் தமிழர் தம்பிகளை அலறவிட்ட திமுக மொராப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணனுக்கு கோடி நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications