மனைவிக்கு 'அந்த' இடத்தில் நாகமச்சத்தால் தோஷம்... கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய கணவன்!
Recommended Video

பாலக்கோடு : மனைவிக்கு நாகமச்சம் இருப்பதால் தோஷம் எனக் கூறியதை நம்பி கணவனே கூலிப்படையை ஏவி மனைவியைக் கொன்று எரித்துள்ள சம்பவம் தர்மபுரியை அடுத்த பாலக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பட்டாளட்டன் கோவிலின் பின்புறம் உள்ள புதரில் கடந்த 13ம் தேதி எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் விவரம் எதுவும் தெரியாத நிலையில் சடலத்தை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அந்தப் பகுதிக்கு அருகே போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த போது பைக்கில் வந்த நபர் ஒருவர் சந்தேகமளிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான தகவலை கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது திடுக்கிடும் பல தகவல்களை அவர் கூறியுள்ளார்.

மனைவிக்கு நாகமச்சம்
பாலக்கோடு அருந்ததியர் காலனியைச் சேர்ந்த 40 வயது நபர் மூர்த்தியே போலீஸ் வசம் சிக்கியவர். அவர் அளித்த வாக்குமூலத்தில், "என்னுடைய முதல் மனைவி சாலலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் துர்காதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தேன். ஜோசியர் ஒருவரிடம் ஜோதிடம் பார்க்க சென்ற போது துர்காதேவிக்கு நாகமச்சம் இருப்பதாகவும் அவரால் எனக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்காது என்றும் ஜோசியர் கூறினார்.

மனைவியை கொல்ல முடிவு
இதனால் மனநிம்மதி இழந்து தவித்த நான் துர்காதேவியை கொல்ல முடிவு செய்தேன். பெங்களூரைச் சேர்ந்த சகல், அம்ருதின், சாதிக்பாட்ஷா ஆகியோரிடம் ரூ. 1 லட்சம் பேரம் பேசி துர்காதேவியை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டேன். கடந்த 11ம் தேதி இரவு கூலிப்படையினர் வீட்டிற்கு வந்து துர்காதேவியை கழுத்தை நெரித்து கொன்றனர்.

கழுத்தை நெரித்து கொலை
பின்னர் நாங்கள் அனைவரும் சேர்ந்து துர்காதேவியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி பட்டாளம்மன் கோவில் பின்புறம் உள்ள புதரில் வீசிவிட்டோம். மறுநாள் காலையில் நான் மட்டும் அங்கு சென்று துர்காதேவியின் உடலை தீ வைத்து எரித்தேன் என்று மூர்த்தி கூறியுள்ளார். கொலை செய்ததற்கான கூலியை வாங்குவதற்காக கூலிப்படையினர் மயானம் அருகே காத்திருப்பதாகவும் அவர்களுக்கு பணம் கொடுக்கச் சென்ற போது போலீசிடம் சிக்கிக் கொண்டதாகவும் மூர்த்தி தெரிவித்துள்ளார். மூர்த்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அடக்கொடுமையே
சுய உழைப்பில் முன்னேற்றம் அடைய என்ன வழி என்று பார்க்காமல் ஜோசியத்தை நம்பி அநியாயமாக கட்டிய மனைவியையே கொன்றுள்ளார் இந்த மூர்த்தி. இந்த கலியுகத்திலும் இப்படியான மூர்த்திகள் வாழ்வதை நினைத்தால் அவர்களுக்கு புத்தி கீர்த்தி இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications