'ஜி.கே.மணி இதெல்லாம் ஒரு பிழைப்பா'.. தமிழ்குமரன் உதயநிதியின் அடிமை.. அன்புமணி விமர்சனம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் பாடி செல்வம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ராமதாஸ் அணியை சேர்ந்த ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரன் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பென்னாகரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, ஜி.கே. மணியையும், அவரது மகன் தமிழ்குமரனையும் 'இதெல்லாம் ஒரு பிழைப்பா? என்று கேட்டு கடுமையாக விமர்சித்து பேசினார்.
பாமகவை பொறுத்தவரை அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும் என இரண்டு அணிகள் பிரிந்துள்ளன. இதில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, அதிமுக பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அதிமுக, அன்புமணி ராமதாஸ் அணிக்கு 18 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. இதில் பெரும்பாலும் வடமாவட்டங்களில் தான் வழங்கப்பட்டுள்ளது. ராமதாஸை பொறுத்தவரை சசிகலா உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். அவரது ஆதரவாளர்களும் கணிசமான இடங்களில் போட்டியிடுகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் பாடி செல்வம் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ராமதாஸ் அணியை சேர்ந்த ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரன் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாடி செல்வத்திற்கு ஆதரவாக அன்புமணி நேற்று (ஏப்ரல் 16) தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அன்புமணி பேசுகையில், "சில துரோகிகளால் எங்கள் குடும்பத்தில் குழப்பம் உண்டாகி உள்ளது. ஆனால் பாமக தற்போது முன்பைவிட பல மடங்கு வளர்ந்து இருக்கிறது. ஜி.கே.மணியை பார்த்து நான் கேட்கிறேன். எதற்கு உங்களுக்கு இந்த பிழைப்பு? இந்த பிழைப்பு உங்களுக்கு தேவையா? இதற்கு, நீங்கள் திமுகவிலேயே சேர்ந்திருக்கலாமே. மு.க.ஸ்டாலினின் அடிமை ஜி.கே.மணி; அதே போல், உதயநிதி ஸ்டாலினின் அடிமை தமிழ்குமரன்.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? கை சின்னத்திற்கும், பென்னாகரத்துக்கும் என்ன சம்பந்தம்? பென்னாகரத்தில் காங்கிரஸுக்கு 500 வாக்குகள்தான் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது மீண்டும் போட்டியிடுகிறது.
ஜி.கே.மணி குடும்பம் ரூ. 2,000 கோடி சம்பாதித்திருக்கிறது. ஜி.கே.மணி 25 ஆண்டுகாலமாக பாமக தலைவராக இருந்தவர். அதனால், இப்போது நான் தலைவர் ஆனது ஜி.கே.மணிக்கு பொறுக்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியில் குழப்பம் செய்து மீண்டும் திமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான். குடும்பத்தில் தான் குழப்பம்; கட்சியில் குழப்பமில்லை. உறுதியாக நாம் வெற்றி பெறுவோம்; எடப்பாடி பழனிசாமி உறுதியாக தமிழ்நாட்டின் முதலமைச்சராவார்" இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.














Click it and Unblock the Notifications