"வா மோதி பார்ப்போம்.. வந்தால் திரும்பிப் போகமுடியாது" திமுகவுக்கு சவால் விடுத்த நாம் தமிழர் நிர்வாகி
தர்மபுரி: நாம் தமிழர் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கரிகாலன், திமுகவுக்கு அறைகூவல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கரிகாலன் கலந்து கொண்டார்.
நாம் நரகத்தை நோக்கி செல்கிறோம்.. ஜாக்கிரதை! டெல்லி கட்டிட இடிப்பு.. ப. சிதம்பரம் கடும் எச்சரிக்கை!
நாம் தமிழர் நிகழ்ச்சி
கொள்கை விளக்கக் கூட்டத்தில் பேசிய கரிகாலன், திமுகவுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கரிகாலன், "அதிமுக ஆட்சியில் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை கொண்டு வரப்பட்ட போது, திமுக அதை எதிர்த்து. ஆனால், இப்போது அதே சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை அதிவிரைவு சாலை எனப் பெயர் மாற்றம் செய்து, தற்போது திமுக அரசு நடைமுறைப்படுத்த முயல்கிறது.
கொள்ளை முயற்சி
இதன் மூலம் நமது மலைகளில் இருக்கும் மனிமங்களை கொள்ளையடிக்க முயல்கிறார்கள். அரூர் பகுதியில் வாழும் மக்கள் இந்தத் திட்டத்தை உயிரை கொடுத்தாவது நிறுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு மக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு எப்போதும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.
வா மோதி பார்ப்போம்
கடந்த முறை மொரப்பூர் பகுதியில் பொதுக் கூட்டம் நடந்த போது, எதார்த்தமாக இருந்துவிட்டோம். அதைப் பயன்படுத்தி திமுக நிர்வாகிகள் மேடை ஏறி பிரச்சினை செய்துவிட்டீர்கள். இந்த முறை முன் தயாரிப்போடு வந்துள்ளோம். வா மோதி பார்ப்போம். வந்தால் சம்பவம் தான். வரிப்புலி நாங்கள், வந்தால் திரும்பிப் போகமுடியாது" என்று திமுகவினருக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மொராப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அங்கு நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக் கொண்டு இருக்கும் போது, திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறி, அங்கிருந்த திமுக நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.