அன்புமணிக்கு உள்ளதும் போச்சே! பாமக செயல்தலைவராக காந்திமதி நியமனம்- ராமதாஸ் அறிவிப்பு
தருமபுரி: பாமக செயல் தலைவராக ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திமதியை நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தருமபுரியில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் அவர் இந்த முடிவை அறிவித்தார்.
தருமபுரியில் பாமக பொதுக் குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், பாமக செயல்தலைவர் பதவியை அன்புமணி ஏற்காததால் அந்த பதவி ஸ்ரீகாந்திமகிக்கு வழங்கப்படுகிறது.

செயல்தலைவர் ஸ்ரீகாந்திமதி எனக்கும் கட்சிக்கும் பாதுகாப்பாக இருப்பார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்திமதி அண்மையில்தான் பாமக நிர்வாகக் குழு உறுப்பினராக பதவியேற்றார். இந்த நிலையில் தற்போது செயல்தலைவராகவும் பதவி ஏற்கிறார்.
அன்புமணி ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே வெடித்த கருத்து மோதல் இன்று வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும் அன்புமணி பதிலளிக்கவில்லை.
செப்டம்பர் 4
இதையடுத்து செப்டம்பர் 4ஆம் தேதி தைலாபுரத்தில் நடந்த பாமக மாநில நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக ராமதாஸ் தெரிவித்தார்.
விளக்கம் அளிக்காத அன்புமணி
மேலும் இந்த நோட்டீஸிற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் கெடு முடிந்த பிறகும் அன்புமணி ராமதாஸ் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனால் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
அன்புமணியை நீக்க அதிகாரமில்லை
அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரமில்லை, பாமக விதிகளின்படி அன்புமணியே தலைவர் என்று செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியில் மகள் காந்திமதிக்கு ராமதாஸ் முக்கியத்துவம் கொடுத்தார்.
காந்திமதிக்கு செயல் தலைவர் பதவி
அந்த வகையில் அவருக்கு பாமக நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை கொடுத்தார். இதையடுத்து தருமபுரியில் நடந்த பாமக பொதுக் குழு கூட்டத்தில் வைத்து செயல்தலைவர் பதவியை காந்திமதிக்கு வழங்கினார்.
தமிழ்குமரன்
அது போல் பாமக இளைஞர் சங்க தலைவராக தமிழ்க் குமரனையும் நியமித்திருந்தார் ராமதாஸ். இந்த நிலையில் ராமதாஸின் அறிவிப்பு குறித்து திருப்பூரில் அன்புமணியிடம் கேட்ட போது, "கட்சியின் உள்விவகாரம் குறித்து எந்த பதிலும் அளிக்க முடியாது" என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
யார் இந்த காந்திமதி
ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியின் மூத்த மகள்தான் இந்த காந்திமதி. இவருக்கு அடுத்து கவிதா , அன்புமணி ஆகியோர் உள்ளனர். காந்திமதிக்கு சுகந்தன், பிரதீபன், முகுந்தன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகனைத்தான் அன்புமணியின் மூத்த மகள் சங்கமித்ராவுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
சம்பந்திகள்
எனவே அக்கா தம்பி உறவை தாண்டி அன்புமணியும் காந்திமதியும் சம்பந்திகளாக உள்ளனர். தனது அக்கா காந்திமதியின் கடைசி மகன் முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் நியமித்ததற்குதான் அன்புமணி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது அவரது அம்மா காந்திமதிக்கு பாமக செயல்தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்துள்ளது அன்புமணிக்கு பேரதிர்ச்சிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications