நடிகைக்கு மாசம் ரூ 50 ஆயிரம் பணம் கொடுத்தேன்! சீமான் ஒப்புதல் வாக்குமூலம்
தருமபுரி: நடிகைக்கு மாதம் ரூ 50 ஆயிரம் வீதம் 2, 3 மாதங்களுக்கு கொடுத்தேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நடிகை, தன் மீது அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த போது சீமான் கூறியிருப்பதாவது: ஒரு நடிகை, ஒரு பெண் சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா.

ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். ஆனால் புகார் கூறிவிட்டாலே குற்றவாளி என முத்திரை குத்திவிடுவதா? எனக்கு திருமணம் ஆகும்போது அதை அந்த நடிகை நிறுத்தி இருக்கலாம். எனக்கும் அவருக்கும் திருமணமாகியிருக்கிறது என்றால் அதற்கு ஆதாரம் எங்கே?
நான் அவருக்கு 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தேனாம். அப்படியென்றால் ஒரே ஆண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நான்தான். அதுவும் சிறையில் இருந்தபடியே கட்டாய கருக்கலைப்பு செய்ய முடியுமா?
நானே தெருக்கோடியில் நின்னுக்கிட்டு இருக்கேன். இதுல நடிகைக்கு கொடுக்க என்கிட்ட எங்க 2 கோடி ரூபாய் இருக்கு? ஒரு முறை வாழறதுக்கு வழியில்லை, நான் இறந்துடுவேன், எனக்கு உதவி செய்ங்கன்னு ஒரு ஆடியோவை நடிகை 15 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியிருந்தார்.
அது கூட எனக்கு அனுப்பவில்லை. என் வீட்டில் வேலை செய்த ஒருவர் மூலமாக உதவி கேட்டார். அதனால்தான் மாதம் ரூ 50 ஆயிரம் என 2- 3 மாதங்களுக்கு கொடுக்குமாறு உதவினேன். அந்த ஆடியோவை நீங்கள் கேட்டால் உங்களுக்கும் உதவ வேண்டும் என தோன்றும். அந்த அளவுக்கு அவர் அழுதபடியே பேசினார். உதவி என கேட்டால் கொடுத்து தொலைக்க வேண்டியதுதான். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரை 2012 ஆம் ஆண்டு நடிகை திரும்ப பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் இந்த விசாரணை தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கலாம். 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பேரில் வளசரவாக்கம் போலீஸார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன்படி வழக்கு தொடர்பாக பெங்களூரில் உள்ள நடிகையின் வீட்டிற்கு வளசரவாக்கம் போலீஸார் மீண்டும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் உள்ள முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications