உள்ள போக வேண்டி வரும்.. சீண்டிய பாஜக நாராயணன்! முடிஞ்சா தொட்டு பாரு(ங்க)..சீறிய எம்பி செந்தில்குமார்
தருமபுரி: அண்ணாமலையை விமர்சித்ததற்கு ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவின் நாராயணன் திருப்பதியிடம் முடிந்தால் தொட்டு பாருங்க என்று பதிலடி கொடுத்து உள்ளார்.
தருமபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர். தன்னுடைய செயல்பாடுகள், கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள், அரசியல் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
அதேபோல், பாஜக, அதிமுக, நாம் தமிழர் போன்ற எதிர்க்கட்சிகள் மீது பகிரங்கமாக ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் தருமபுரி செந்தில்குமார். இவரது ட்விட்டர் பதிவுகள் அரசியலில் விவாதப் பொருளாகவும் மாறி வருகின்றன.
திமுக மட்டும் புத்திசாலி கட்சியா? தலைமை நீதிபதி கேள்வி! இதிலென்ன டவுட்? எம்பி செந்தில்குமார் பதில்!
செந்தில்குமார் பேட்டி
இந்த நிலையில், தனியார் இதழுக்கு செந்தில்குமார் பேட்டியளித்து இருக்கிறார். அதில், "பாஜக பாகிஸ்தானையும், இந்துத்துவாவையும் வைத்து தேர்தலை சந்திக்கிறது. எங்களுக்கு மக்கள் நலமே முக்கியம். எங்களது பாணியை கையில் எடுத்து பல தேசிய கட்சி கட்சிகளும் வெற்றி பெறுவதை கண்டு பாஜகவினர் அஞ்சுகின்றனர். எனவே இலவசங்களை எதிர்க்கிறார்கள்.
அண்ணாமலை குறித்து விமர்சனம்
பல மாநிலங்களில் சட்டமன்றங்களில் பாஜக பின்னணியில் இருப்பவர்களில் எத்தனை பேர் மாற்றுக்கட்சியினர் என்ற கணக்கை தெரிவித்தால் அண்ணாமலை என்ன செய்வார்? அண்ணாமலை பேசுவதை எல்லாம் சிரித்துவிட்டுக் கடந்துவிட வேண்டும். சீரியஸாக எடுத்துக்கொண்டு விவாதித்து கொண்டிருக்க தேவை இல்லை." என்று பேசினார்.
சீண்டிய நாராயணன்
ட்விட்டரில் இந்த கருத்துக்களுடன் பேட்டியின் லிங்கை திமுக எம்.பி செந்தில்குமார் பகிர்ந்து இருந்தார். இதனை கண்ட பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, செந்தில்குமாரை டேக் செய்து, "ஆமாம்.சீரியஸாக எடுத்துக் கொண்டு விவாதித்தால், சிரித்துக் கொண்டே கடந்து போய் விட முடியாது. அழுது புலம்பிக் கொண்டே உள்ளே தான் போக வேண்டி வரும். அப்படித்தானே" என்று கேட்டிருந்தார்.
செந்தில்குமார் பதிலடி
நாராயணன் திருப்பதியின் பதிவை ட்விட்டரில் ரீடுவீட் செய்துள்ள செந்தில்குமார், "மீண்டும் சொல்கிறேன். முன்னே செல்லுங்கள். கொண்டு வாருங்கள். முடிஞ்சா தொட்டு பாரு(ங்க)" என்று பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு பதிவில், "இலவசமாக விளம்பரம் தேடும் நபர்களுக்கு, இங்கே போனி ஆகாது. வேறு கதவை தட்டவும்." என்று அவர் கூறி உள்ளார். ஆனால் இப்பதிவில் யாரையையும் செந்தில்குமார் குறிப்பிடவில்லை.