அதெப்படி திமிங்கலம் 3 பேருக்கும் ஒரே மாதிரி..திண்டுக்கல்லில் 2 கொலை! குற்றவாளிகளுக்கு எலும்பு முறிவு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல ரவுடியான தயாளவர்மன், திமுக ஒன்றிய செயலாளரான மாசி அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலைகள் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவருக்கு காலிலும், ஒருவருக்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள காப்பிலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தயாளவர்மன் என்பவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி அருவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.

இந்நிலையில் காவல்துறை தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது நேற்று முன் தினம் வினோத், கவியரசு ஆகிய இருவரை கைது செய்தது. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேலும் இரண்டு பேரான மாரிமுத்து மற்றும் பகவதி ஆகியோரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.
காவல்துறையின் தேடுதல் வேட்டையில் நேற்று மாரிமுத்து வடமதுரை அருகே பதுங்கி இருந்த பொழுது கைது செய்யப்பட்டார். மேலும் காவல்துறையிடம் சிக்காமல் பகவதி போக்கு காட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலாயுதம்பாளையம் கணவாய் மேடு பகுதியில் பகவதி ராஜா மறைந்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்தனர்.
காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக பகவதி ராஜா அங்கிருந்த பாறையில் இருந்து குதித்த போது அவரது கால் உடைந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பகவதியை கைது செய்து சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து உடைந்த காலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மாவு கட்டு போட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பிரமுகரான மாசி பெரியண்ணா என்பவர் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுமோகன் மற்றும் சரவணன் ஆகிய 2 பேர் நேற்று வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல்துறையினர் சரணடைந்த இரண்டு பேரையும் வேடசந்தூருக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினர் பெரியகவுண்டம்பட்டி அருகே உள்ள பெரியகுளம் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது இரண்டு பேரும் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயற்சித்த போது தவறி கீழே விழுந்து மதுமோகனுக்கு வலது கை எலும்பு உடைந்தது.
சரவணனுக்கு இடது காலும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போடப்பட்டது. தொடர்ச்சியாக வேடசந்தூரில் உட்கோட்டத்தில் நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களில் இரண்டு பேருக்கு கால் முறிவு ஒருவருக்கு கை முறிவும் ஏற்பட்ட சம்பவம் சந்தேகத்தைப் ஏற்படுத்தி வருகிறது.
ஆயுதங்கள் எடுக்க சென்ற இடத்தில் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது என்று காவல்துறையினர் கூறுவது நம்பும்படி இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications