பச்ச குழந்தை முகத்தை இனி பார்க்க முடியாது..வீட்டருகே இருந்த வினை! கவிமதியை காவு வாங்கிய 'எமன்’..!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6வயது சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை காணவில்லை என பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில், வீட்டருகேயே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
சிறுவர் சிறுமிகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர் மிக கவனமாக இருக்க வேண்டும். கடந்த சில தினங்களாகவே விபத்துகள் உள்ளிட்டவற்றில் சிக்கி பச்சிளம் குழந்தைகள் பலியாவது அதிகரித்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கின்றனர்.
தற்போது வார இறுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நீர் நிலைகளில் மூழ்கி பள்ளி சிறுவர்களும் சிறுமிகளும் உயிரிழந்து வருகிறார்கள். மேலும் வீட்டருகே கிணறு தண்ணீர் தொட்டி ஆகியவை அமைக்கும் போது தகுந்த பாதுகாப்போடு அமைக்க வேண்டும்.

இல்லையேல் வீட்டில் இருக்கும் சிறுவர் சிறுமிகள் தவறி விழுந்து உயிரிழக்கும் நிலை கூட ஏற்படலாம். அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் ஏற்பட்டுள்ளது. வீட்டு அருகே அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38) நூற்பாலை தொழிலாளி.
இவரது மனைவி நந்தினி(29)இவர் சல்லயகவுண்டனூர் அரசு ஆரம்ப பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் கவிமதி (6) தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை கவிமதி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது நந்தினி இளைய மகளை மட்டும் தூக்கிக் கொண்டு வீட்டின் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது கவிமதி மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஊரின் பல பகுதிகளிலும் தேடிப் பார்த்த நிலையில் அவர் கிடைக்கவில்லை. இதை அடுத்து உறவினர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குழந்தையை தேடுமாறு கேட்டுக் கொண்டனர். குழந்தையை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக பல இடங்களில் விசாரித்தும் கவிமதி குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வீட்டின் அருகே 7 அடி தண்ணீர் தொட்டி இருக்கும் நிலையில் அங்கு தேடி பார்க்கலாம் என உறவினர் ஒருவர் கூறியுள்ளார். இதை அடுத்து வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தேடிய போது அதற்குள் கவிமதி விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிமதியின் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கவிமதியின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆறு வயது சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications