கொடைக்கானல் மலைப்பாதையில் பிரேக் பிடிக்காத ஆம்புலன்ஸ்.. கஷ்டத்திலும் நடந்த நல்ல விஷயம்
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள கிராமங்களில் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை பெற வேண்டும் என்றால் ஆம்புலன்ஸில் அடர்ந்த மலைப்பாதையில் செல்ல வேண்டும். கொடைக்கானலில் அரசு மருத்துவமனை உள்ளது. மேல் சிகிச்சை என்றால், தேனி அல்லது திண்டுக்கல்லுக்குத்தான் போக வேண்டும். திண்டுக்கல்லுக்கு அப்படி சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. எதிர்பாராதவிதமாக பிரேக் பிடிக்காமல் ஆம்புலன்ஸ் பாறையில் மோதியது. இதில் சிகிச்சைக்காக சென்ற குழந்தை உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ்பெற்று கோடைவாசல் தலமாக இருக்கிறது. இங்கு கோடை விடுமுறையில் ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். அதேபோல் வார நாட்களில் குறைவாகவும், வார இறுதிகளில் அதிகமான மக்களும் சுற்றுலா வருகிறார்கள். இதேபோல் விடுமுறை நாட்களிலும் அதிகம் பேர் சுற்றுலா வருகிறார்கள். கொடைக்கானலை பொறுத்தவரை விபத்து ஏற்பட்டால், பிரசவம் என்றால், ஒரு பெரியஅரசு மருத்துவமனை உள்ளது.

கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் உள்ளது. கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் இங்கு தான் அவசர தேவைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். அதேநேரம் உயிருக்கு ஆபத்தான நிலை என்றால் அல்லது மேல் சிகிச்சை தேவை என்றால் தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தான் செல்வார்கள். அதேநேரம் பிரசவம் தொடர்பான மேல் சிகிச்சை என்றால் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள்.
இந்நிலையில் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 52 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சிகிச்சைக்காக, பழனி பகுதியை சேர்ந்த (பச்சிளம் பராமரிப்பு) 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை கொடைக்கானலில் இருந்து அழைத்து சென்றுள்ளார்கள்.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. டம்டம் பாறை அருகே வளைவில் திரும்பியபோது, திடீரென பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடி மலைப்பாதையோரத்தில் பாறையில் மோதி ஆம்புலன்ஸ் வாகனம் நின்றது. நல்ல வேளையாக இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர், குழந்தை, அதன் தாய் உள்பட 4 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
இதுகுறித்து சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள், 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு குழந்தை, குழந்தையின் தாயார், ஆம்புலன்ஸ் உதவியாளர் ஆகியோரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். விபத்து காரணமாக கொடைக்கானல் மலைப்பாதையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் வாகனத்தில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக மலையில் இருந்து கீழே இறங்கும் போது பிரேக் சரியாக இருக்க வேண்டும். பிரேக் பெயிலியரானால் பெரிய சிக்கல் ஏற்படும்.












Click it and Unblock the Notifications