தோல்பாவை கூத்து..அழியும் நிலையில் அற்புத கலை! நிலைமை ரொம்ப மோசம்.. இறுதி மூச்சு வரை போராடும் கலைஞர்!
திண்டுக்கல்: மராட்டிய மண்ணில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதியாகி தற்போது வெகு சில இடங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வரும் கலைகளில் ஒன்றான தோல்பாவைக் கூத்துக் கலையை வாழ வைக்க தனது இறுதிக் காலத்தில் போராடி வரும் தோல்பாவை கலைஞர் ஒருவர்..
பாரம்பரியமிக்க பாவைக்கூத்து கலை இன்று பரிதாப நிலையில் உள்ளது. அரசு உதவி கிடைக்காமல் கலைஞர்கள் தவித்து வருகின்றனர். பாவைக்கூத்துதான் முதலில் தோன்றியது.

அதன் பிறகே தெருக்கூத்து, அல்லது பொய்க்கால்குதிரை, கணியன் கூத்து போன்றவை தோன்றியதாகவும், பாவைக்கூத்தை அடிப்படையாக கொண்டே ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பின் பேசும் படங்கள் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
தோல்பாவை கூத்து: மகராஷ்டிரா மாநிலம் தான் தோற்பாவை கூத்தின் பூர்வீகம் எனலாம். அங்கிருந்து தஞ்சை மன்னர் சரபோஜி காலத்தில் தான் தமிழகத்தில் வேரூன்றியது. அங்குள்ள ராவ் இன மக்கள் தஞ்சை பகுதயில் முதலில் குடியேறினர். இவர்கள் மூலம் தமிழகத்தில் பட்டி தொட்டி எல்லாம் பெயர் பெற்றது. 1980 க்கு முன்பு வரை கிராமங்களில் இதற்கு தனி மவுசு இருந்தது. பாவைக்கூத்து மூலம் நடத்தப்படும் ராமாயணம், மகாபாரதம் கதை மாதக்கணக்கில் நடக்கும்.

சுதந்திர போராட்டம்: கிராமங்களில் ஒரு பொது இடத்தில் டெண்ட் அமைத்து டிக்கெட் போட்டு பாவைக்கூத்து நடக்கும். சுதந்திர போராட்டத்தில் பாவைக்கூத்து கலைஞர்களின் பங்கு மகத்தானது. பாவைக்கூத்து மூலம் சுதந்திர போராட்டம் குறித்து மக்களிடையே விளக்கப்பட்டது. இவ்வளவு பெருமை மிக்க இக்கலை நலிவடைந்து போனது. இன்று இங்கொன்றும் அங்கொன்றுமாக இக்கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். கலை மீது கொண்ட ஆர்வத்தால் வறுமையிலும் பாவைக்கூத்து கலையை வளர்த்து வருகின்றனர்.
அடையாளம் இல்லை: அரசு நல வாரியங்கள் மூலம் பல சலுகைகளை வழங்கி வருகிறது. தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை மூலம் இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க 2010 ஏப்.15ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 300 குடும்பங்கள் வரை பாவைகூத்து கலையில் உள்ளனர். திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் மூன்று குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு மாவட்டத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. ஆனால் நிரந்தர வீடு இல்லை. ரோட்டோரங்களில் வசித்து வருகின்றனர்.

நிழற்கூத்து கலை: திண்டுக்கல் தேனி எல்லையில் வத்தலகுண்டு அருகே வசிக்கும் தோற்பாவை நிழற்கூத்து கலைக்குழுவை சேர்ந்த முத்துலட்சுமணராவ் தனது தாத்தா லட்சுமணராவ், அப்பா ஆறுமுகராவ் காலம் தொட்டு பரம்பரையாக தோற்பாவை கூத்து நடத்தி வருகிறார்.. 10 வயதில் இருந்து இந்த கலையில் ஈடுபட்டுள்ள அவர் தனது நான்கு மகன்களையும் பாவைக்கூத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கலைபண்பாட்டுத்துறை சார்பில் தற்போது இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

வரவேற்பில்லை: கிராமங்களில் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிக்கு தற்போது போதிய வரவேற்பு இல்லாத நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் அழைப்பின் பேரில் சென்று அங்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கலையை நம்பி இருக்கும் தங்களுக்கு எந்த வருமானமும் இல்லை எனக் கூறும் அவர் அரசு விழாக்களில் பாவை கூத்து நிகழ்ச்சிகளை சேர்க்க வேண்டும், என்றார்.

அரசின் கடமை: அழிந்து வரும் கலைகளில் ஒன்றான தோல்பாவைக்கூத்து கலையையும் கலைஞர்களையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல நமது கடமையும் கூட தங்கள் இல்ல நிகழ்ச்சிகளிலும் பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளில் இது போன்ற கலைகளை அரங்கேற்றினால் கலையும் வாழும் கலைஞர்களும் வாழ்வர் என்பது நிதர்சனம்.












Click it and Unblock the Notifications