திண்டுக்கல்லில் பைக் - கார் மோதல்! 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி பிரிவு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் ரெண்டலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (25). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அருணா (23). இவர்களுக்கு ரக்ஷன் ஜோ (7) என்ற மகனும் ரக்ஷிதா என்ற மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் ஜோசப், மோட்டார் பைக்கில் ரெண்டலபாறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லாம்பட்டி பிரிவில் அந்த சாலையில் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
திடீரென எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜோசப், அருணா, அவர்களது இரு குழந்தைகள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். தகவலறிந்த திண்டுக்கல் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தாலுக்கா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications