பழனி முருகனுக்கே மொட்டை.. ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி! ஆனாலும் அரெஸ்ட் பண்ண முடியாது! ஏன்?
திண்டுக்கல்: பழனி அடிவாரத்தில் உள்ள அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்ட நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ2 கோடிக்கு மோசடிப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பழனி முருகன் கோவில்
இவ்வழக்கின் தீவிரத்தன்மை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து சம்பந்தப்பட்டிருப்பது மற்றும் அரசு அதிகாரி ஒருவரே இந்த மோசடிக்குத் துணை நின்றது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி ஆகியோர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த நில மோசடியில் பல முக்கியப் பிரமுகர்களுக்கும், உயர்மட்ட அரசியல் நிர்பந்தங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், வழக்கினை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
சிபிசிஐடி
அதனை ஏற்றுக்கொண்ட தமிழக காவல்துறை தலைமையகம், இந்த வழக்கினை உடனடியாகச் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பழனி அடிவாரம் போலீசாரிடம் இருந்து வழக்கு ஆவணங்கள் அனைத்தும் இணையதளம் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் நேற்று முன் தினம் திண்டுக்கல், தேனி, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்களின் மேல்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் அலுவலகத்தில் முதற்கட்ட தகவல் அறிக்கை தயார் செய்து, பழனியில் சம்பந்தப்பட்ட இடத்தில் கள ஆய்வு நடத்தினர்.
பழனி கோவில் நிலம்
இதன் தொடர்ச்சியாக, நேற்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட பழனி அறநிலையத்துறை வழக்கு தாக்கல் செய்த முருகானந்தம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம், மதுரையில் இருந்து வருகை தந்த சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிதா நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இன்று தற்போது போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜஸ்டின் மணிகண்டன்
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு லிங்கா அவென்யூ பகுதியில் அமைந்துள்ள பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் இரண்டு வாகனங்களில் வருகை தந்த எட்டிற்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் தீவிர விசாரணையை மேற்கொண்டு மோசடி பத்திரப்பதிவு சம்பந்தமான ஏதேனும் முக்கிய ஆவணங்கள் குறித்து ஆராய்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவரது வீட்டில் இல்லை என்று தெரிய வருகிறது.
நில மோசடி
இதைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் அவரது குடும்பத்தினர்கள் இடம் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஜஸ்டின் மணிகண்டனின் மனைவி மட்டும் இருந்த நிலையில் அவரிடம் பழனி நில மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்திருக்கிறோம் என கூறிய சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் செல்ல சூட்கேசையும் தயார் நிலையில் கொண்டு வந்திருக்கின்றனர்.
கைது செய்ய முடியாது
இந்த நிலையில் ஆய்வு நடத்தினாலும் ஜஸ்டின் மணிகண்டனை தற்போதைக்கு சிபிசிஐடி போலீசாரால் கைது செய்ய முடியாது. காரணம் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜஸ்டின் மணிகண்டன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டால் முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கோரிக்கை விடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications