பாஜகவை நினைத்து பீதி.. திண்டுக்கல் விழாவில் திப்பு சுல்தான், ஹைதர் அலி பெயரை தவிர்த்த எடப்பாடி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மாமன்னர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் பெயரை குறிப்பிடாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது சர்ச்சையாகி உள்ளது.
திண்டுக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏக்கள் வி.பி.பி. பரமசிவம், தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரலாற்று விவரம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லின் வரலாற்றை விவரித்தார். விருப்பாச்சி கோபால் நாயக்கர், முத்து கிருஷ்ணப்ப நாயக்கர், சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சுவாமி என எண்ணற்றோர் பெயர்களை திண்டுக்கல் வரலாற்றறை விவரிக்கும் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
ஹைதர் அலி- திப்பு சுல்தான்
அதேநேரத்தில் திண்டுக்கல் வரலாற்றில் மிக முக்கியமான மாமன்னர்கள் எனில் ஹைதர் அலியும் திப்புசுல்தானும். முதலாம் விடுதலைப் போர் 1857-ல் தொடங்குவதற்கு முன்னரே ஹைதர் அலி- வேலு நாச்சியார்- மருது சகோதரர்கள்- திப்புசுல்தான்- கோபால்நாயக்கர் கூட்டணிதான் சுதந்திர வேட்கையை விதைத்தது. இதை அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஏராளமான நூல்களில் எழுதி பதிவு செய்திருக்கின்றனர்.
திண்டுக்கல் நினைவு மண்டபம்
பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிரான யுத்தத்தில் வீரமாக விதைத்தவர்கள் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும். திண்டுக்கல் வரலாற்றில் இம்மன்னர்களுக்கும் இடம் இருப்பதாலேயே இங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபமும் எழுப்பினார். ஆனால் இந்துத்துவா சக்திகளின் மிரட்டலால் இது நீண்டகாலமாக திறக்கப்படாமல் பின்னர் திறக்கப்பட்டது.
தவிர்த்த முதல்வர்
தற்போது திண்டுக்கல் வரலாற்றை குறிப்பாக மலைக்கோட்டையின் எழுச்சிமிகு வரலாற்றை குறிப்பிடுகையில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் பெயர்களை முதல்வர் குறிப்பிடவில்லையே என்கிற ஆதங்கம் எழுப்பப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியினர் எங்கே எதிர்ப்பு தெரிவிப்பார்களோ என்கிற அச்சத்தின் காரணமாக இதை முதல்வர் தவிர்த்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.