தாய் மாமன்னா சும்மாவா? சும்மா ஊரையே மிரட்டி விட்டாப்ள! வண்டி வண்டியாக சீர்வரிசை.. வாயடைத்த சொந்தம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனது சகோதரியின் மகனுக்கு நடைபெற்ற காதணி விழாவிற்கு 10 மாட்டு வண்டி மற்றும் 10 டிராக்டர்களில் 1008 தட்டுகளில் சீர்வரிசை கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என ஊரே மெச்சும் அளவிற்கு சீர் கொண்டு வந்து செய்த தாய் மாமனைக் கண்டு பொதுமக்கள் அதிசயித்துப் போயினர். காதணி விழாவையொட்டி தங்கையின் மகனை சாரட் வண்டி பூட்டி ஊர்வலமாக அழைத்து வந்து அசத்தியுள்ளார் தாய் மாமன்.
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி காது குத்து விழாவில் தாய்மான்களுக்கு என்றுமே தனி மரியாதை தான். அதேபோல் தங்களுடைய சகோதரியின் பிள்ளைகளுக்கு சேனைத் தொட்டு வைப்பது முதல் திருமணம் முடியும் வரை நடைபெறும் அனைத்து வகையான விசேஷங்களிலும் முன் நின்று நடத்துவது என்றுமே தாய்மாமன்.
ஆயிரம் சண்டைகள் ஏற்பட்டாலும் தனது தாய்மாமன் உரிமையை என்றும் விட்டுக் கொடுப்பதில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக இருந்ததுதான் கிழக்குச் சீமையிலே திரைப்படம். குறிப்பாக இத்திரைப்படத்தில் வரும் "மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே" என்னும் பாடல் தாய் மாமன்களையும் சகோதரிகளையும் உறவு எவ்வளவு பெரியது என்ற உணர்ச்சி பெருக்குடன் விவரிக்கும்.

இப்படி தனது கௌரவத்தை காட்டும் வகையில் தாய் மாமன்கள் தனது உடன் பிறந்த சகோதரிகளின் மகன், மகள் காது குத்து விழாவில் சிறப்பாக சீர் வரிசை செய்வது என்பது பாரம்பரிய முறையாகும். அதன்படி திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வருபவர் சந்தோஷ். இவரது மகன் யுவன் ஸ்ரீஹரி, இவரது காது குத்து விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதற்காக 10 மாட்டு வண்டிகள், 10 டிராக்டர்களில் ஒரு வருடத்திற்கு தேவையான பலசரக்கு சாமான்கள், அரிசி மூட்டைகள், இனிப்பு வகைகள், காய்கறிகள், வாழைப்பழம் பலாப்பழம் என பல வகையான பழ வகைகள், புத்தாடைகள், பணம், தங்கநகைகள் போன்றவை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தின் முன்னே கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டங்கள் நடைபெற்றது.

மேலும் ஊர்வலத்தில் பொன் முத்துராமலிங்க தேவர், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வடிவேல் ஆகியோர் வேடம் அணிந்து ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.
மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஆட்டுக்கிடா ஆகியவையும் சீதனமாக கொண்டு கொண்டு வரப்பட்டது. தப்பாட்டம், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஊர்வலம் பின்னே இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சார்ட் வண்டியில் மருமகன் யுவன்ஸ்ரீஹரியை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பின்னர் மண்டபத்திற்கு வந்ததும் தாய்மாமன் மடியில் வைத்து காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரே மெய்ச்சும் அளவிற்கு இன்று நடைபெற்ற காதணி விழாவில் தாய்மாமன் கொண்டு வந்த சீர்வரிசை திண்டுக்கல்லில் பேசு பொருளாகியுள்ளது. குறித்து தாய்மாமன் முத்துக்குமார் கூறுகையில், ஆயிரம் இருந்தாலும், தாய்மாமன் உறவு என்பது எதற்கும் ஈடு இணை இல்லாதது அதன் காரணமாகவே பாரம்பரிய முறைப்படி 1008 சீர் வரிசை தட்டுகளுடன், தனது தங்கைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்கள் சீராக கொண்டு வந்து கொடுத்துள்ளேன்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications