கொலைநகரமாகும் திண்டுக்கல்! ஒரே நாளில் ஒரே மாதிரியான இரண்டு படுகொலைகள்.. தலைகள் துண்டிப்பு!!
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் ஒரே நாளில் ஒரே மாதிரியான இரண்டு படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இரண்டு சம்பவங்களிலும் கொல்லப்பட்ட நபர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டத்தில் தான் உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் உள்ளது அதேபோல் தமிழ் கடவுளான முருகன் கோயிலும் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் தான் உள்ளது .மேலும் பூட்டு, புகையிலை, பிரியாணி மற்றும் பூக்களுக்கு பெயர் பெற்றது திண்டுக்கல் மாவட்டம்.
இத்தகைய சிறப்பு பெற்ற மாவட்டம்தான் இப்போது கொலைகார நகரமாக உருமாறிக் கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு பகுதியில் கொலைகள் நடந்த வண்ணம் உள்ளது.

கொலை முயற்சிகள்
கடந்த சில நாட்களாக திண்டுக்கல் நகரில் தொடர்ந்து கொலை முயற்சி , கொலைகள் நடந்து கொண்டே உள்ளது. கடந்த 13-ந் தேதி இரவு இரு இளைஞர்கள் நாகல் நகர் பகுதியில் ஒருவரை கொலை செய்யும் முயற்சியுடன் கத்தியால் குத்தினர். அதன் பிறகு திண்டுக்கல் நகர மையப்பகுதியில் உள்ள தங்கம் லாட்ஜ் அருகே இருவரை பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக ஓட ஓட வெட்டினர். இச்சம்பவத்தில் முன்னாள் பெண் கவுன்சிலர் கணவர், மகன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலை துண்டிப்பு
அதேபோல் அடுத்த நாளே திண்டுக்கல் அருகே உள்ள குட்டியபட்டி பகுதியில் இப்ராகிம் என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மேலும் திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவரை வெட்டி ரயில் முன் வீசினர். இந்நிலையில் நேற்று காலை முன்பகை காரணமாக நிர்மலா தேவி என்பவர் தலையை வெட்டி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று தலையை வீசிச் சென்றனர்.

பசுபதி பாண்டியன் கொலைக்கு பழி
2012-ம் ஆண்டு திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை, தூத்துக்குடி மூலக்கரை பண்ணையார் தரப்பு வெட்டி படுகொலை செய்தது. இந்த படுகொலை சம்பவத்தில் பண்ணையார் தரப்புக்கு இன்பார்மராக இருந்தவர் நிர்மலாதேவி. அதனால் பழிக்குப் பழிவாங்கும் வகையில் நிர்மலா தேவி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் அவரது தலையை வெட்டி எடுத்து நந்தவனப்பட்டியில் பூட்டி கிடக்கும் பசுபதி பாண்டியன் வீடு முன்பாக வைத்துவிட்டு சென்றனர்.

இளைஞர் வெட்டி கொலை- தலை துண்டிப்பு
இந்த பதற்றம் அடங்குவதற்குள் நேற்று மாலையே திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்டீபன்ராஜ், அதே பகுதியில் பேருந்து நிலையம் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஸ்டீபன்ராஜ்ஜ் தலையை துண்டித்து அங்கேயே வைத்து விட்டும் சென்றது மர்ம நபர்கள் கும்பல். ஆனால் ஸ்டீபன் ராஜ் உடலை மட்டப்பாறை அருகே வீசி சென்று உள்ளனர். கொலை செய்யப்பட்ட ஸ்டீபன்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடும் நடவடிக்கை தேவை
திண்டுக்கல் நகர் பகுதியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொலைகளும் அதேபோல் அரிவாளால் வெட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் தற்போது அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். தொடர் கொலை,தொடர் அரிவாள் வெட்டு போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு தயங்குகின்றனர். ஆகவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து திண்டுக்கல் மாவட்ட மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள். இது போன்ற தொடர் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications