திண்டுக்கல்லில் மாணவியை மானபங்கப்படுத்த முயன்ற திமுக பிரமுகர்.. கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே 12ம் வகுப்பு மாணவியை தகராறின் போது, இழுத்து பிடித்து மானபங்கப்படுத்த முயன்ற திமுக பிரமுகரை கட்டி வைத்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே வளவிசெட்டிபட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயதாகும் சுப்பிரமணி. இவர் அந்த பகுதியில் திமுக பிரமுகர் ஆவார். இவர் சுக்காம்பட்டி என்ற ஊராட்சி மன்றத்தின் துணை தலைவராக இருக்கிறார். இவருக்கும், மற்றொரு குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கிராம மக்கள் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் பொங்கல் அன்று இரவு அந்த குடும்பத்தினரின் வீட்டுக்கு சென்ற சுக்காம்பட்டி ஊராட்சி மன்றத்தின் துணை தலைவரான சுப்பிரமணி திடீரென தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த
சுப்பிரமணி, வீட்டில் இருந்த 16 வயதான பிளஸ்-2 மாணவியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயன்றாராம்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியின் பக்கத்து வீட்டில் உள்ள குடும்பத்தினர் அவரை பிடித்து தள்ளி, வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்தார்களாம். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் மாணவியை மானபங்கப்படுத்த முயன்றது குறித்து தெரிவித்து குடும்பத்தினர்கள் கூச்சலிட்டிருக்கிறார்கள். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அக்கம்பக்கத்தினர், மாணவியின் பெற்றோருடன் சேர்ந்து சுப்பிரமணியை வீட்டின் முன்பு உள்ள தூணில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது,
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடமதுரை போலீசார், சுப்பிரமணியை கிராம மக்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், சுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் அவரை கட்டி வைத்து அடித்தது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications