ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு.. உடலில் பெட்ரோல் ஊற்றிகொண்டு தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டர்!
திண்டுக்கல்: அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் திமுக தொண்டர் ஒருவர் அமைச்சர் வீட்டு முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த திமுக தொண்டர்கள் பெட்ரோல் கேனை அப்புறப்படுத்தினர்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்எல்ஏ, மகள் இந்திராணி ஆகிய 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 மணி நேரத்தைக் கடந்து சோதனை நடைபெற்ற நிலையில். ஐ பெரியசாமியின் வாகனத்தை சோதனை செய்ய விடாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் திமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது. இவரது வீட்டில் இன்று காலை 7:30 மணி முதல் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 CRPF போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டிலும் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு 10 CRPF துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் திமுக கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பழனி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு சீலப்பாடியில் உள்ளது. இவரது வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 8 CRPF போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மூன்று வீடுகளிலும் இன்று காலை 7:30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் பெரியசாமி பயன்படுத்திய வாகனத்தை சோதனையிட முயன்ற போது தடுத்து நிறுத்திய திமுகவினருக்கும் சி ஆர் பி எப் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் சோதனை செய்யாமல் மீண்டும் உள்ளே சென்று விட்டனர். இந்நிலையில் திமுக தொண்டர் மேலக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அருகில் இருந்த திமுக தொண்டர்கள் பெட்ரோல் கேனை அப்புறப்படுத்தினர்.
தற்போது தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லம் அமைந்திருக்கும் பகுதியான துரைராஜ் நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகவும் பதற்றமான சூழல் உள்ளது.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் அறையில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் அறை பூட்டப்பட்டு இருந்ததால் நீண்ட நேரமாக அறைக்கு வெளியே காத்திருந்தனர். இதனிடையே எம்.எல்.ஏ விடுதிக்கு வந்த சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். எம்.எல்.ஏ செந்தில்குமார் அறையை உடைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதி துறை அமைச்சராக ஐ பெரியசாமி இருந்தபோது, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீட்டு வசதித் துறை நிலம் ஒதுக்கீடு செய்து அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டியதில் ஜாபர் சேட் மனைவிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அமலாக்கத்துறை அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications