பழனியில் தோட்டத்து வீட்டில் 4 பேர் தீயில் எரிந்து மர்ம மரணம்.. விசாரணையில் திடுக் தகவல்!
பழனி: பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்தினரை தீவைத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னராசு என்கிற முருகேசன் (52). இவரது மனைவி வளர்மதி (45), மகள் சிவரஞ்சனி (21), மகன் கார்த்திகேயன் (18).
இவர்களில் வளர்மதி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். மகன் பழனியில் உள்ள ஒரு கல்லூரியில் பி காம் படித்து வந்தார். முருகேசன் தனக்குச் சொந்தமான ஒரு தோட்டத்து வீட்டில் குடியிருந்தார். நேற்று குடும்பத்தினருடன் வேலாயுதம்புதூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பினர்.

மக்காசோளத் தட்டை
இந்த நிலையில் நேற்றை தினம் அதிகாலை 2 மணி அளவில் அவரது தோட்டத்தில் உள்ள மக்காசோளத் தட்டை தீப்பிடித்து எரிந்தது. அருகிலுள்ள தோட்டத்தில் வசித்த அவர்களது உறவினர்கள் இதைப் பார்த்துவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பழனி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது எரிந்து கொண்டிருந்த மக்காசோளத் தட்டைப் போருக்குள் இறந்த நிலையில் 4 பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது.

தகவல் கிடைத்தது
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் வந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது முருகேசன், வளர்மதி, சிவரஞ்சனி, கார்த்திகேயன் என தெரியவந்தது. இவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கான திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் 4 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சிகிச்சை இல்லை
விசாரணையில் கார்த்திகேயனுக்கு சிறுநீரகக் கோளாறு இருந்ததாகவும், இதற்காக சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் மனமுடைந்து காணப்பட்ட முருகேசன் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. எனினும் விஷம் குடித்த நிலையில் அவர்களே ஏன் மக்காச்சோளத் தட்டைக்கு தீ வைத்துக் கொண்டு அதனுள் இறந்து கிடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சோளத் தட்டை தீ
அந்த வகையில் ஆயக்குடி போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த மரணமோ மற்ற மூவரையும் தீ வைத்துக் கொளுத்திவிட்டு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும், தீயால் பற்றி எரிந்த குடும்பத்தினருடன் சாவிலாவது ஒன்றியணைய வேண்டும் என்பதால் அவரும் அந்த சோளத் தட்டை தீயில் விழுந்திருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications