குணா குகை.. பைன் மரக்காடுகளுக்கு செல்ல வனத்துறை தடை.. கொடைக்கானல் சென்ற பயணிகள் ஏமாற்றம்
திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தையும் கண்டு ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் இந்த சுற்றுலா தலத்தில் கடந்த சில தினங்களாக வாகன நிறுத்தும் இடம்,கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. குறிப்பாக கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன்மரக்காடு, பில்லர் ராக் உள்ளிட்டவை சிறந்த சுற்றுலா இடங்களாக விளங்குகின்றன. இந்தநிலையில் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். அதன்காரணமாக விடுமுறை நாட்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல் சுற்றுலா இடங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதிகள் செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் குடிநீர், பயோ கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகள் இன்று புதன்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிவடைந்ததும், சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனத்துறை அறிவிப்பினால் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பைன் மரச்சோலை அருகே சாலையோரம் வேனை நிறுத்திய போது, அவ்வழியாக வந்த மற்றொரு வேன் அதன் மீது மோதியது. இதில் தூத்துக்குடியில் இருந்து சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுப்பையா என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய வேன் மீது அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதின. இதில் பெண்கள், குழந்தைகள் என 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 7 பேர் தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கோர விபத்தைத் தொடர்ந்து கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனச்சரகர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications