37 ஆண்டு சிபிஎம் அரசியல்.. 26ல் ஊராட்சி மன்றம்..53ல் நாடாளுமன்றம்! திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் லோக் சபா தொகுதியில் முதன்முறையாக களம் கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 4.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். 19987ல் இந்திய வாலிபர் சங்கத்தில் இருந்து ஆரம்பித்த கம்யூனிஸ்ட் அரசியல் பயணம் தற்போது டெல்லி வரை நீண்டிருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி சிபிஐ எம்-க்கு ஒதுக்கப்பட்டது. யார் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திமுக அமைச்சர்களான ஐ.பெரியசாமி சக்கரபாணியின் ஆதரவு, நீண்ட நெடிய அரசியல் பயணம், மக்கள் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவு என சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 44,3933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர், 670502 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் முகமது முபாரக் 226569 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 112544 மட்டுமே பெற்றனர்.
திண்டுக்கல்லில் விவசாயிகளுக்காகவும், பழங்குடியின மக்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார் சச்சிதானந்தம். மேலும் இளம் வயதிலேயே ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் கிராமம் கட்டச்சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு எஸ்.கவிதா என்ற மனைவியும், ஆர்.எஸ்.வைசாலி, ஆர்.எஸ்.மிருணாளினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதனையடுத்து திண்டுக்கல் எம்பியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள இவர், இந்திய மாணவர் சங்கத்தில் 1987 to 1990 வரை மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர். 1992ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளராக அதன்பின்பு 1994 to 2002 வரை மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணை செயலாளராகவும், பணியாற்றியுள்ளார்.
2004 to 2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த திண்டுக்கல் தாலுகா செயலாளராக அதன்பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். + 2007 to 2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்ட செயலாளர், மாநில துணை செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு 1996 2001, 2001 2006 என இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக பணியாற்றியுள்ளார். இதை தொடர்ந்து 2006 முதல் 2016 வரை இவருடைய மனைவி இரண்டு முறை தலைவராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். 1988ம் ஆண்டு கட்சி உறுப்பினராக, 1995-ல் மாவட்டக்குழு உறுப்பினராக, 2007-ல் மாவட்ட செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி உள்ளார்.
2018ம் ஆண்டு முதல் தற்போது வரை மாவட்ட செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இரத்ததான கழகத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி இதுவரை 32 முறை இரத்ததானம் செய்துள்ளார். விவசாய சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் பழனி வட்டத்தில் உபரி நில மீட்பு போராட்டத்தை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த நிலத்தை ஏழை விவசாயிகளுக்கு மீட்டு கொடுக்கும் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தினார்.
கூடலூர், லந்தக்கோட்டை, கருங்கல் கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களில் சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு முன் போராடி அத்திட்டத்தை கைவிட செய்து விவசாய நிலங்களை பாதுகாத்தார். புலையன் இனத்தை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கொடைக்கானல் துவங்கி சென்னை வரை மக்களை திரட்டி போராட்டம் நடத்தியவர்.
கட்சி மாவட்ட செயலாளரான பிறகு 2020ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திண்டுக்கல், பழனி, வேடசந்தூரிலும் தொடர்ந்து ஒருவார காலம் நடத்திய போராட்டம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஊராட்சி மன்றத்தில் எவ்வித லஞ்ச, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை நடத்தியவர் என்கின்றனர் கட்சியினர்.












Click it and Unblock the Notifications