நெற்றியில் பொட்டு, கையில் கயிறு.. திமுக அரசின் சந்துரு அறிக்கையில் பர்தா எங்கே? சிலுவை? யார் பாருங்க
திண்டுக்கல் : இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதம் பரிந்துரை செய்துள்ள நீதிபதி சந்துருவின் அறிக்கையை வன்மையாக கண்டிப்பதாக இந்து முன்னணி மீண்டும் தெரிவித்திருக்கிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், கடந்த வருடம் அரசு பள்ளி மாணவனை, சக மாணவர்கள் வீடு புகுந்து, அரிவாளால் வெட்டிய சம்பவம், மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நல்லிணக்கம்: இதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழக அரசு சார்பில், கடந்த வருடம் ஆகஸ்ட் 12ம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் 650 பக்க அறிக்கையை, நீதிபதி சந்துரு கடந்த வாரம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ஆனால், இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன..
நிராகரிப்பு: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக காழ்ப்புணர்வு நடவடிக்கை எடுக்கும் வகையிலும் அதன் பரிந்துரைகள் உள்ளதால், அதனை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்துள்ளன.
அந்தவகையில், இந்து முன்னணியும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தது. இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மணிக்கட்டு: அதில், "மணிக்கட்டில் காப்பு கயிறு கட்டக்கூடாது நெற்றியில் திலகமிடக்கூடாது என்று சொன்ன கமிஷன், மறந்தும் கூட சிலுவை அணியக்கூடாது, முகத்தை மறைக்கும் பர்தா அணியக்கூடாது என்று ஆலோசனை அளிக்கவில்லை என்பதில் இருந்தே கமிஷனின் நோக்கம் வெட்ட வெளிச்சம் ஆகிறது.
பின் தங்கியவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், பட்டியல் சமூகத்தினர் என்று ஜாதி அடிப்படையிலேயே தனிதனியாக நடத்தி சாதி அடையாளத்தை திணிப்பதே அரசுதான். சாதி அடிப்படையில் பாடசாலைகளையும் அரசுதான் நடத்தி வருகிறது. இஸ்லாமிய பாடசாலை, அரசு உருது பாடசாலை, கிறித்துவ பள்ளிகள், அரசின் உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் என அனைத்து வித மதப் பள்ளிகளும் செயல்பட்டுவருகின்றன.
இந்து மத பழக்கம்: இந்து மத பழக்கவழக்கங்களை தடை செய்யும் நோக்கத்துடனும், சமூக பெரியோர்களின் வரலாற்றை சிதைக்கும் வகையிலும், மத மாற்றத்திற்கு துணை போகும் வகையிலும், திராவிட கம்யூனிஸ மிஷநரி கும்பலின் பின்புலத்தில் உருவாக்கபட்டுள்ள அறிக்கைக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது" என்றெல்லாம் கூறி மிகப்பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, ஒரு நபர் கமிஷன் அறிக்கையை அரசு ஏற்கும் என்றால் இந்து முன்னணி அதனை எதிர்த்து மக்களைத் திரட்டி ஜனநாயக ரீதியில் பேரியக்கம் தொடர் போராட்டம் நடத்தும் என்றும் காடேஸ்வரா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்து முன்னணி: இந்நிலையில், இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கைகளை அளித்திருக்கிறார் என்று மீண்டும் இந்து முன்னணி குற்றஞ்சாட்டியிருக்கிறது.
திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இதுகுறித்து பேசும்போது, "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் கூலிக்கு விற்பனை செய்யும் அப்பாவிகள் சிலர் கைதாகி உள்ளனர். இதற்கு பின்னால் அரசியல் உள்ளது. போதை கடத்தலில் சிக்கிய ஜாபர் சாதிக் போல் இந்த விவகாரத்திற்கு பெரிய அரசியல் உள்ளது
திப்பு சுல்தான்: ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்கள் இருந்தன. திப்பு சுல்தான் படையெடுப்பு காலத்தில் விக்ரகங்கள் அகற்றப்பட்டன. இப்போது அபிராமி அம்மன் கோயிலில் உள்ளன. மறுபடியும் மலைமீது அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்களை நிறுவ வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கு இந்து முன்னணி ஆதரவு அளிக்கிறது... இதற்காக ஜூலை 5 முதல் 20 வரை கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளோம். அரசியல் கட்சிகள் ஓட்டுகளுக்காக பயப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் இந்து முன்னணி களத்தில் நிற்கும்.
சந்துரு: ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு மாணவர்கள் நெற்றியில் திலகம், பொட்டு, பூ வைக்கக் கூடாது. கைகளில் கயிறுகளை கட்டி பள்ளிக்கு வரக்கூடாது என பரிந்துரைகளை செய்துள்ளது. சிலுவை, தொப்பி, பர்தா அணியக்கூடாது என கூறவில்லை. இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதம் பரிந்துரை செய்துள்ள அவரது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications