பரபரப்பான பழனி! திடீரென வந்த ஹெலிகாப்டர்.. முருகன் கோயிலுக்கு வந்த விஐபி.. யாருன்னு பாருங்க
திண்டுக்கல்: உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வருகை தந்த சிங்கப்பூர் சட்ட அமைச்சர் அங்கு சாமிதரிசனம் செய்தார். சிங்கப்பூர் அமைச்சர் வருகையால் நேற்று சிறிது நேரம் பழனி பரபரப்பாக காணப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் சற்று கூடுதலாக போடப்பட்டு இருந்தது. முன்னதாக சிங்கப்பூர் அமைச்சர் பழனி ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதால் யார் இந்த விஐபி என பலரும் புருவம் உயர்த்தி பார்த்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முதல் வீடாகவும், திருச்செந்தூர் 2 ஆம் வீடாகவும் உள்ளது. அதேபோல, 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பழனி கோயிலுக்கு இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

அந்த வகையில், சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் நேற்று விமானத்தில் சென்னைக்கு வந்தார். பின்னர் விமானத்தில் தூத்துக்குடிக்கு சென்ற அவர் அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் பழனிக்கு வந்தார். இதையொட்டி அவர் வந்த ஹெலிகாப்டர் இறங்குவதற்காக பழனியில் உள்ள தனியார் பள்ளியில் பிரத்யேகமாக 'ஹெலிபேட்' அமைக்கப்பட்டு இருந்தது.
தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் அவர் வந்த ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. அங்கிருந்து கார் மூலம் பழனி மலை அடிவாரம் சென்றார். முன்னதாக காசி விஸ்வநாதன் சண்முகத்துக்கு போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் பழனி முருகன் கோயிலுக்கு சென்றார். பின்னர் கோயிலில் நடந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
கோயில் சார்பில், காசி விஸ்வநாதன் சண்முகத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் தரிசனம் முடித்து விட்டு அடிவாரம் வந்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் 'ஹெலிபேட்' அமைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு வந்தார். பின்னர் ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் செல்வார் எனத் தெரிகிறது.
முன்னதாக பழனியில் தனியார் பள்ளி வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் அங்கிருந்த மக்கள் பரபரப்பும் ஆச்சர்யமும் அடைந்தனர். சிங்கப்பூர் அமைச்சர் என்பதால் பக்தர்கள் பலருக்கும் தெரியவில்லை என்பதால், யார் இந்த விஐபி என சக பக்தர்கள் இடையே கேட்டு தெரிந்து கொண்டனர். சிங்கப்பூர் அமைச்சர் வருகையால் நேற்று சிறிது நேரம் பழனி பரபரப்பாக காணப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் சற்று கூடுதலாக போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications