பழனி சித்தனாதன் பஞ்சாமிர்த கடைக்கு சீல்.. 9 மணி நேர சோதனைக்கு பிறகு வருமான வரி அதிகாரிகள் நடவடிக்கை
பழனி: பழனியில் சித்தனாதன் பஞ்சாமிர்த கடைக்கு சீல் வைத்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 9 மணி நேர வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் வருமானவரித்துறை ரெய்டு என்பது அன்றாட நிகழ்வு போல மாறிவிட்டது, அனைவரும் அறிந்ததே.

அரசியல்வாதிகளின் வீடுகள், தொழிலதிபர்களின் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் போன்ற போன்றவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதை, தினசரி செய்தியாக மக்கள் அறிந்து வருகிறார்கள்.
வருமான வரித் துறை அதிகாரிகளின் கெடுபிடியால்தான், கஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தா நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு வருமான வரி துறை கடும் கெடுபிடி காட்டி வருகிறது.
இப்போது பழனியில் உள்ள பஞ்சாமிர்த கடைகளில் காலை முதல் தொடர்ந்து 9 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. வரி ஏய்ப்பு, செய்ததாக புகார் வந்ததாக கூறி இதுபோன்ற சோதனைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர்.
20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் ஆகிய புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். கணக்கு வழக்குகளை சரி பார்த்து வருகின்றனர்.
இதனிடையே பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தனாதன் பஞ்சாமிர்த கடைக்கு இரவு நேரத்தில் சீல் வைத்தனர் அதிகாரிகள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications