165 ஜல்லிக்கட்டு களங்கள்.. வீரத் தமிழச்சி என பெயர் பெற்ற ரேணுகா.. ஆனால், இப்போ கண்ணீரில்!
திண்டுக்கல்: சிறுவயதிலிருந்து 165 காளைகளை ஜல்லிக்கட்டு வாடிவாசலில் அவிழ்த்து, வீரத் தமிழச்சி என பட்டம் பெற்ற, திண்டுக்கல்லைச் சேர்ந்த ரேணுகாதேவி, தனது கணவர் விபத்தில் சிக்கியதால், தனது காளைகளுக்கு உணவளிக்க முடியவில்லை எனவும், தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு வேலை வாய்ப்பு கேட்டு 6 மாத குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
தமிழகத்திலேயே அதிகம் ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டம் திண்டுக்கல். இங்கு புகையிலைப்பட்டி, வெள்ளோடு, பில்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

குறிப்பாக புகையிலைப்பட்டியில் ஆண்கள் மட்டுமல்லாது ஏராளமான பெண்களும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்கள். பொதுவாக ஜல்லிக்கட்டு களங்கள் என்றாலே ஆண்களுக்கு தான் என்ற நிலை மாறி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் தற்போது பெண்களும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதிலும் அவற்றை களத்துக்கு கொண்டு வருவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். பெண்கள் வளர்க்கும் காளைகள் வீட்டில் சாதுவாகவும் களத்தில் வீரமாகவும் இருக்கும். அந்த வகையில் திண்டுக்கல்லை சேர்ந்த இளம் பெண்ணான ரேணுகாதேவி பி.காம் முடித்து இருக்கிறார். சிறு வயதிலிருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளை அவிழ்த்து பரிசுகளை பெற்று இருக்கிறார்.
165 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்கும் அவரது காளைகள் இதுவரை தோற்றதில்லை என கூறப்படுகிறது. மேலும் வீர தமிழச்சி என மதுரையில் பெயர் பெற்ற அவர் தற்போது தனது கை குழந்தையுடன் கண்ணீர் மல்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தனது கை குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அவர் கொடுத்துள்ள மனுவில்," சிறு வயதில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளையுடன் பங்கேற்று வருகிறேன். இதுவரை மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 165 ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளை வெற்றி பெற்றிருக்கிறது. 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த காளைக்கான விருதை எனது காளை வென்றது. இதற்காக ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.

1994 ஆம் ஆண்டிலிருந்து நான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருவதால் எனக்கு 'வீர தமிழச்சி' விருது வழங்கப்பட்டது. பிகாம் சிஏ பட்டதாரியான எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. தற்போது எனது கணவர் விபத்தில் சிக்கி காலில் அடிபட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளார். இதனால் எனது இரண்டு குழந்தைகளையும், எனது காளையையும் வளர்க்க முடியவில்லை. எனவே எனக்கு ரேஷன் கடை விற்பனையாளர் பணி வழங்கி உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்" என கூறப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளில் வீரத்துடன் கலந்து கொண்டு காளைகளை அவிழ்த்து பரிசு பெற்றவர் தனக்கு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்துள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு உதவ வேண்டுமென சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications