அதிமுகவை கபளிகரம் செய்ய பாஜக முயற்சி... சசிகலாவால் குழப்பங்கள் மேலும் கூடும் -மார்க்சிஸ்ட் கம்யூ.
திண்டுக்கல்: அதிமுகவை கபளிகரம் செய்ய பாஜக முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
மேலும், சசிகலாவின் அரசியல் வருகையால் அதிமுகவில் குழப்பங்களும், கோஷ்டிப்பூசல்களும் இன்னும் அதிகரிக்கும் என அவர் கணித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

திண்டுக்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தோழர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை நல்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து ஆபத்தானது எனத் தெரிவித்தார்.

அரசு கட்டுப்பாடு
கோயில்களில் உள்ள ஆவணங்கள், விலைமதிப்பற்ற நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அது அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டுமே தவிர தனி நபர்களின் கட்டுப்பாட்டுக்கு செல்லக்கூடாது என விளக்கம் அளித்தார். முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருந்ததாகவும் பயன்பாட்டை பொறுத்தவரை நிலக்கரி தட்டுப்பாடு நிலவியதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணை தேவை
இது குறித்து கேட்டால் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வாயே திறப்பதில்லை என சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக கூறியிருக்கிறார். மாநில அரசுக்கு மத்திய அரசு போதிய அளவு நிலக்கரி கொடுக்க மறுப்பதால் பற்றாகுறை காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டுள்ள அவல நிலை உருவாகியுள்ளதாக சாடினார்.

பாஜக மீது சாடல்
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி அக்கட்சியை கபளிகரம் செய்ய பாஜக முயற்சித்து வருவதாக கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். மேலும், சசிகலாவின் அரசியல் வருகையால் அக்கட்சியில் குழப்பங்களும், கோஷ்டிப்பூசல்களும் இன்னும் அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் கணித்துள்ளார். இதனிடையே திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணிச்சலுடன் குரல் கொடுத்தவர் கே.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications