கொடைக்கானலில் போதை காளானுக்கே டஃப் கொடுக்கும் குதிரை தாளி! வார்னிங் கொடுத்த அதிகாரிகள்
கொடைக்கானல்: தேசிய அளவில் பிரபலமான கோடை வாசஸ்தலமாக புகழ்பெற்ற இடங்களில் கொடைக்கானல் மிக முக்கியமான பகுதியாகும். இங்கு குதிரை தாளியை வைத்து, சிகிச்சை கொடுக்கப்படுவதாக சமீபத்தில் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் ஷேரான நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், குதிரை தாளியை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலிருந்தும் இதர மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இங்கு போதை காளான்கள் பயன்பாட்டை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் குதிரை தாளியை போதை பொருள் போல பயன்படுத்துவதாக பேச்சுகள் அடிப்பட்டிருந்தன. பலரும் இது குறித்து அச்சம் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

குதிரை தாளி ராஜு:
சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்ட அனைத்து வீடியோக்களிலும் ராஜு என்பவர் இடம் பெற்றிருந்தார். துணியில் எதையோ சுற்றி, அதை சுற்றுலாக்களுக்கு வரும் இளைஞர்களை நுகர சொல்கிறார். அவ்வளவுதான் அடுத்த சில நொடிகளுக்கு, இளைஞர்கள் தங்கள் சுயநினைவை இழக்கின்றனர். ராஜு துணியில் சுற்றி வைத்திருந்தது என்ன? என்பது பெரிய கேள்வியாக வெடித்தது. சிலர் இதை மிக மோசமான போதைப்பொருள் என்று கூட விமர்சித்திருந்தனர்.
சாதாரண மருந்துதாங்க:
ஆனால் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் மறுத்த ராஜு, "இது சளி காய்ச்சலுக்கு கொடுக்கும் சாதாரண மருந்துதாங்க" என்று கூறியிருந்தார். மூக்கில் ஏறும் நெடி, அப்போதைக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள முடியாதவாறு செய்துவிடும் என்பது உண்மைதான் என்றும், ஆனால் இந்த நிலை வெறும் 3-4 நொடிகள் மட்டுமே நீடிக்கும் என்பதால் ஆபத்து இல்லை என்றும் கூறுகிறார். கடந்த பல ஆண்டுகளாக சித்த வைத்தியம் செய்து வருவதாக கூறும் ராஜு, குதிரை தாளியை பெங்களூரிலிருந்து கொண்டுவரப்பட்டு இங்க நட்டு வைத்து வளர்த்தது நான்தான் என்றும் கூறியுள்ளார்.
சர்ச்சை வீடியோவும், போலீஸ் ரெய்டும்:
சுற்றுலா பயணிகளிடமிருந்து குதிரை தாளி சிகிச்சைக்கு ரூ.600 முதல் ரூ.3000 வரை ராஜு கட்டணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ராஜுவிடம் குதிரை தாளியை நுகர்ந்து பார்த்தனர். பின்னர் வேறு யாருக்கும் இதை கொடுத்துவிட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இதனையடுத்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய அதிகாரிகள்,
"கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்கு மிகவும் பேமஸான இடம். ஆனால் சிலர் இங்கு போதைக்காகவே வந்து செல்கின்றனர். இது சுற்றுலா கிராமங்களின் தன்மையை அடியோடு மாற்றிவிடுகிறது. போதையில்லாத குடும்பம்தான் வாழ்வில் சிறந்து விளங்கும். எனவே போதை பொருட்களின் விற்பனையை நீங்கள் நினைத்தால் தடுக்க முடியும். போதை விற்பனையை ஊக்குவிக்க வேண்டாம். அதே நேரம், நீங்களும் அதில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என கூறியுள்ளனர்.
போதை காளான்கள்:
கொடைக்கானலை பொறுத்தவரை முக்கியமான போதை பொருளாக போதை காளான் இருக்கிறது. இதை எடுத்துக்கொள்ளும் போது அப்போதைக்கு போதை தருவதாக இருந்தாலும் கூட, நீண்ட நாள் நோய் பாதிப்பை ஏற்படுத்தும். வன்முறை, நோய் பரவல் உள்ளிட்டவற்றிக்கு முக்கிய காரணியாக இது இருக்கிறது. இளைஞர்கள் இதை உட்கொள்ளும்போது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தடைபடுகின்றன. எனவே அவர்களின் முழு திறனையும் வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications