கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களை விற்றால்.. கடைளுக்கு சீல் வைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
திண்டுக்கல்: கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்கும்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் , "மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் அதிருப்தி
இதையடுத்து, "பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை" என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் விற்கும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும். அனைத்து பேருந்துகளையும் சோதனை செய்ய வேண்டும்.

ஓட்டுநர் மீது நடவடிக்கை
சோதனைக்கு வாகனங்களை நிறுத்தாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய நிரந்தர படைகளை அமைக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை
குறிப்பாக கோடைக்காலங்களிலும் குளுமையான பகுதியாக உள்ள கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகளில் தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பயணிகள் கூட அதிக அளவில் வருவதைக் காண முடியும். இதுபோன்ற மலைப்பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே வீசி விட்டு செல்வது அங்குள்ள இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் பெரும் ஆபத்தாக அமையும் என்றும் இயற்கை ஆர்வலர்களும் வன விலங்கு நல ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

வன விலங்குகளுக்கும் ஆபத்து
குறிப்பாக மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வனப்பகுதியில் அப்படியே கிடப்பதோடு அதனை வனவிலங்குகளும் உட்கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் வனவிலங்குகள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்பதால் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சமூக நல ஆர்வலர்கள் வலுவாக முன்வைத்து வருகின்றனர்.

பயன்பாடு இருப்பதாக புகார்கள்
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு உள்ள போதிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தான் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்கும்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications