ஊசி மணி பாசி மணி.. மோதிரம்.. நத்தத்தை கலக்கும் மன்சூர் அலிகான்.. வியாபாரம் செய்து வாக்கு சேகரிப்பு
நத்தம் பகுதியில் மன்சூர் அலிகான் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.
Recommended Video

நத்தம்: ஊசி மணி.. பாசி மணி.. மோதிரம் என நத்தம் பகுதியில் கூவி கூவி விற்க ஆரம்பித்துவிட்டார் மன்சூரலிகான்!
திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாடியே அந்த தொகுதிக்குள் நுழைந்து ஒத்த ஆளாக கலக்க ஆரம்பித்துவிட்டார் மன்சூரலிகான்!
வித்தியாசமான நபர்.. வித்தியாசமான பிரச்சாரம்.. டீக்கடையில் டீ குடித்து கொண்டே ஓட்டு கேட்கிறார், தெருவில் குப்பை வாரிக் கொண்டே ஓட்டு கேட்கிறார்.. திடீரென கடைக்குள் நுழைந்து பஜ்ஜி, வடை சுட்டு கொடுத்து ஓட்டு கேட்கிறார்..

கறிக்கடை
ஜவுளிக்கடை, மளிகைகடை, பால்கடை, என ஒரு கடையும் விடாமல் ஓட்டு கேட்கிறார்.. கறிக்கடைக்குள் நுழைந்து மட்டனை துண்டு துண்டாக கட் பண்ணி கொண்டே ஓட்டு கேட்கிறார். இதனால் கொஞ்ச நாளிலேயே தொகுதி மக்களின் மனதில் இவர் அசால்ட்டாக நுழைந்துவிட்டார்!

மணிகள்
இப்போதும் அப்படிதான் திடீரென நத்தம் பஜார் ரோட்டில் கடையை விரித்து கொண்டு உட்கார்ந்துவிட்டார். ஊசிமணி, பாசி மணி, என கூவி கொண்டிருந்தார். நிறைய மணிகள், மோதிரங்கள் என தரையில் விரிக்கப்பட்ட பெட்ஷீட்டில் பளபளன்னு காணப்படுகிறது.

கரும்பு விவசாயி
அந்த பஜாரில் நிறைய கடைகள் இருந்தாலும் மன்சூரலிகான் கடையிலேயே கூட்டம் நிரம்பி வழிகிறது. மன்சூரலிகான் பக்கத்தில் ஒருவர் "கரும்பு விவசாய சின்னத்துக்கு ஓட்டு போடுங்க" என்று உரக்க சொல்லி கொண்டிருக்கிறார். கடைக்கு வருபவர்களிடம் ஒவ்வொன்றிற்கும் விலை சொல்கிறார் மன்சூரலிகான். அதில் நிறைய பேர் பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

கறார்தன்மை
"மோதிரம் என்னப்பா விலை" என்று ஒருவர் கேட்க.. "10 ரூபாய்" என்கிறார் மன்சூரலிகான். "விலையை குறைச்சு குடுப்பா" என்று அவர் பேரம் பேச... "அதெல்லாம் முடியாது.. ஒரே விலை.. 10 ரூபாய்.. வாங்கினா வாங்கு.. இல்லாட்டி எடத்தை காலி பண்ணு" என்கிறார் இந்த கறார் வியாபாரி.

வித்தியாசம்
உடனே அந்த கஸ்டமரும் 10 ரூபாய் தந்து மோதிரத்தை வாங்கி கொள்கிறார். அதோடு விடவில்லை.. கடைக்கார ஓனரிடம் அந்த மோதிரத்தை தந்து "நீயே என் விரலில் மாட்டிவிடுப்பா" என்கிறார். மன்சூர் ஓனரும் மாட்டிவிடுகிறார். வித்தியாசமான ஓனராக இருப்பார் போல இருக்கிறது!

தொண்டை கட்டிவிட்டது
இதனிடையே, கூட்டத்தில் ஒருவர் பணம் தராமல் பொருளை எடுத்து கொண்டு நழுவ.. அதை பார்த்து உஷாரான மன்சூரலிகான், தன் பாணியில் அந்த நபரை கூப்பிட்டு "வெட்டிடுவேன்" என்று செல்லமாக மிரட்டுகிறார். மன்சூருக்கு தொண்டை கட்டிவிட்டது போல.. அந்த கரகர குரலிலும் வாக்கு சேகரித்து வருகிறார். இதனால் களை கட்டியது நத்தம் பகுதி!












Click it and Unblock the Notifications