1,000 ஆடிட்டர்கள் மூலம் கணக்கு சரிபார்ப்பு... கடன் கேட்டால் இல்லையென்று சொல்லக்கூடாது -ஐ.பெரியசாமி
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள 5 சவரன் வரையிலான நகைகளை, ஆயிரம் ஆடிட்டர்கள் மூலம் கணக்கு சரிபார்க்கப்பட்டு உரியவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என்பதை சூசகமாக கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய நிர்வாகிகள் வர வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் விரைவில் இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஐ.பி. கூறியிருக்கிறார்.
இதனிடையே கூட்டுறவு சங்கங்களில் கடன் கேட்டு வருவோருக்கு கடன் இல்லையென்று சொன்னால் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார்.
மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை - குரூப் 1 பணியிடம் அளித்தது மகிழ்ச்சி... முதல்வருக்கு நன்றி
16 லட்சம் பேர்
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல்முறையாக கூட்டுறவு வங்கி நகைக்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்திருப்பதாக கூறினார். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். நகைக்கடன் தள்ளுபடியால் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்ற தகவலை வெளியிட்ட அவர் தள்ளுபடி செய்யப்படும் தொகையானது ரூ.6,000 கோடி எனக் கூறினார்.
தீபாவளி பரிசு
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்துள்ள பரிசு தான் நகைக்கடன் தள்ளுபடி என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். நகைக்கடன் மோசடி குறித்து 30% மட்டுமே ஆய்வுகள் முடிந்துள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் ஆய்வுகள் முழுமையாக முடிவடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். நகைக்கடன் பெற மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என்ற எச்சரித்த அவர் கூட்டுறவுத்துறை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.183 கோடி ரூபாய் வரை கடன் கொடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
கடன் கொடுப்போம்
கூட்டுறவு சங்கங்களில் கடன் கொடுப்பது நிறுத்தப்படாது என்றும் தொடர்ச்சியாக கடன் வழங்கப்படும் எனவும் கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, வட்டியில்லா கடன் குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதனிடையே முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கான உரிமையை ஒரு போதும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என உறுதியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லை பெரியாறு அணையை பார்வையிட விரைவில் செல்வார் என்ற தகவலை வெளியிட்டார்.
கூட்டுறவுக் கல்லூரி
கொடைக்கானலில் கூட்டுறவுத்துறை கல்லூரி அமைக்க முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதால் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை பற்றி படிக்கவும், பயிற்சி பெறவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இந்தக் கல்லூரி எதிர்காலத்தில் மிகுந்த பயனாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.