சிதறிக் கிடந்த உடல்.. அருகில் கிடந்த வயர்! சிறுமலையில் கேரள நபருக்கு என்ன வேலை! திகுதிகு திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சடலத்தின் அருகில் பேட்டரி, வயர்கள் மற்றும் டெட்டனேட்டர் ஆகியவை இருந்ததால் போலீசார் இறந்த நபர் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாட முயன்ற போது, தவறுதலாக வெடித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுமலை.18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சிறுமலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.பல ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது.

இங்கு பல அரிய வகை மரங்களும் உயிரினங்களும் இருக்கின்றன. குறிப்பாக கேளையாடு, மான், முயல், முள்ளம்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட உயிரினங்களும் பல அரிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.
இங்கு இருக்கக்கூடிய மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிறுமலையில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வகையான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. துப்பாக்கிச் சூடு, சந்தன மரங்களை வெட்டி கடத்துவது, வனவிலங்கு வேட்டை என அடுத்தடுத்து பல க்ரைம் சம்பவங்கள் நடைபெற்று வருவது வனத்துறையினரையும் காவல்துறையினரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் சிறுமலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் பேட்டரி வயர்கள், டெட்டனேட்டர் ஆகியவை இருந்தது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை பகுதிக்கு செல்லும் மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள வாட்சிங் டவர் உள்ளது.
இதன் அருகே துர்நாற்றம் வீசியதால் மலைச் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கும் திண்டுக்கல் தாலுகா காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் சிறுமலை வனத்துறையினர் மர்மமான முறையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பதை பார்த்தனர்.

இதை எடுத்து அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ததில் இறந்தவரின் உடல் அருகே பேட்டரி வயர்கள் கிடந்துள்ளது. காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்தில்
வெடிகுண்டு நிபுணர்கள், கியூப் பிரிவு போலீசார், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரடியாக ஆய்வு செய்தார்.

மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டெட்டனேட்டர் பயன்படுத்தும் போது ஏற்பட்ட விபத்தில் நபர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இவர் கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. எதற்காக இவர் கேரளாவிலிருந்து திண்டுக்கல் சிறுமலை பகுதிக்கு வந்தார். டெட்டனேட்டரை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தினார். வேறு ஏதும் தீவிரவாத சதி ஏதும் நடைபெற்றதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் சிறுமலையில் கடந்த சில நாட்களாக வனவிலங்கு வேட்டையும் அதிகரித்து இருக்கிறது. நாட்டு வெடிகளை வைத்து காட்டு பன்றிகள் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் டெட்டனேட்டரை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாட முயன்ற போது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே என்ன நடந்தது என்று தெரியவரும் என்கின்றனர் போலீசார்.













Click it and Unblock the Notifications