வண்டியை சித்தையன்கோட்டைக்கு விடுப்பா! பழசை மறக்காத ப.சிதம்பரம்! நெகிழ்ந்த கதர்ச்சட்டையினர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டைக்கு திடீர் விசிட் அடித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அங்கு மறைந்த காங்கிரஸ் பிரமுகர் அப்துல் காதர் குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரித்தார்.
ப.சிதம்பரம் அரசியலில் அடியெடுத்து வைத்தக் காலகட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் சித்தையன்கோட்டை அப்துல் காதர்.
பழசை மறக்காத ப.சிதம்பரம் தனக்கு கிடைத்த சிறிய நேரத்திற்குள் சித்தையன்கோட்டைக்கு சென்று துக்கம் விசாரித்ததோடு கதர்ச்சட்டையினரோடும் அரைமணி நேரம் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அப்துல் காதர்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சித்தையன் கோட்டை அப்துல் காதர் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் காலமானார். இந்த தகவல் டெல்லியில் இருந்த ப.சிதம்பரத்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து டெல்லியிலிருந்து உடனடியாக வர முடியாத சூழலால், அப்துல் காதர் மகனிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார்.

திடீர் விசிட்
இந்நிலையில் ப.சிதமபரம் அலுவலகத்தில் இருந்து சித்தையன்கோட்டை அப்துல்காதர் குடும்பத்தினருக்கு தொடர்பு கொள்ளப்பட்டு ''தலைவர் உங்க வீட்டுக்கு துக்க விசாரிக்க வருகிறார்'' என்ற தகவல் தெரிவிக்கப்படிருக்கிறது. இதையடுத்து அங்கு சென்ற ப.சிதம்பரம் சுமார் அரைமணி நேரம் அமர்ந்து அப்துல் காதர் பற்றிய நினைவுகளை அவரது மகனிடம் பகிர்ந்துகொண்டார். பொதுவாக இது போன்ற துக்க விசாரிப்புகள் உட்பட எந்த நிகழ்வுக்கும் சென்றாலும் அதிகபட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டும் தான் ப.சிதம்பரம் அமர்வார்.

ப.சிதம்பரம்
சித்தையன்கோட்டை அப்துல் காதர் வீட்டில் மட்டும் தான் அரை மணி நேரம் அமர்ந்து துக்கம் விசாரித்துள்ளார். ஆரம்பக்காலங்களில் அப்துல் காதரின் கட்சி செயல்பாடுகள், நிர்வாக திறன், தனக்கும் அவருக்குமான நட்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி ப.சிதம்பரம் மனம் திறந்து பேசி நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். இதனிடையே ப.சிதம்பரத்தை கண்ட குஷியில் அவரது ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், நாற்காலி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறி தரையில் அமர்ந்து கொண்ட நிகழ்வும் நடந்துள்ளது.

கட்சியினர் பிடிப்பு
காங்கிரஸ் கட்சியில் உள்ள மேல்மட்டத் தலைவர்கள் இது போன்று கட்சிக்காரர்கள் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டால் தான் கீழ்நிலை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கட்சிப்பணிகளில் ஒரு பிடிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications