திண்டுக்கல்லில் திகுதிகு.. செவிலியரிடம் பாலியல் சீண்டல்! தனியார் மருத்துவமனை டாக்டர் அத்துமீறல்
திண்டுக்கல்: பழனியில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மருத்துவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது மருத்துவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
பழனியைச் சேர்ந்த செவிலியர் சரசு (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் இவருக்கு மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான கோபால் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மருத்துவமனைக்கு வேலைக்குச் செல்லாமல் செவிலியர் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போதும் மருத்துவர் கோபால் தனது ஆசைக்கு இணங்ககோரி செவிலியரை செல்போனில் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுப்பதும் ஆபாசமாக குறுஞ்செய்திகளை பகிர்வதுமாக இருந்து வந்துள்ளார்.
தன்னைவிட வயதில் மூத்த மருத்துவர் என்பதால் செவிலியர் மருத்துவரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரை அழைத்துப் புகார் தெரிவித்துள்ளார். அப்போது மருத்துவர் கோபாலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். சில நாட்கள் அமைதியாக இருந்த மருத்துவர் கோபால் மீண்டும் செவிலியரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுக்க துவங்கி உள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த செவிலியர் பழனி நகர காவல் நிலையத்தில் கோபால் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் பேசிய ஆடியோக்களை சமர்பித்து புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற நகர காவல் துறை ஆய்வாளர் மணிமாறன், பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் கோபால் மீதும், செவிலியரை மிரட்டியதாக அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த மருத்துவர் கோபால் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். பழனியில் மருத்துவர் தனது மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications