பிரதமர் மோடி நவ.11-ல் தமிழகம் வருகை! காந்தி கிராம விழாவில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி பங்கேற்பு!
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 11-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அக்டோபர் 30-ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவார் எனக் கூறப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி வருகை தொடர்பான பொய்யான தகவல்கள் பரவியது.

நவ.11-ல் வருகை
இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 11-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரும் பங்கேற்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை டூ காந்தி கிராமம்
அதேநேரத்தில் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. காந்தி கிராம பல்கலைக் கழகத்துக்கு நேரில் சென்று தொடர்ச்சியான ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் விசாகன் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி மதுரைக்கு தனி விமானம் மூலம் வருகை தருகிறார். பின்னர் அங்கிருந்து காந்தி கிராம பல்கலைக் கழகத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகிறார். இதற்காக காந்தி கிராமத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு தீவிரம்
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதன்கிழமை முதல் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் காந்தி கிராமம் கொண்டுவரப்படுகிறது. மத்திய படையினர் பாதுகாப்பு அல்லாமல் சுமார் 4,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பாஜகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திமுகவினர் ஏற்பாடு
பிரதமர் மோடியுடன் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூரில் இருந்து காந்தி கிராமம் செல்ல இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கரூர்-மதுரை பைபாஸில் தோமையார்புரம் முதல் காந்தி கிராமம் நுழைவு வாயில் வரை பிரம்மாண்டமான வரவேற்புக்கு திமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications