சூப்பர்..அட்சதையை அள்ளி போட்ட காக்கிகள்! கௌசல்யா முகமெல்லாம் புன்னகை.. மேரிக்கும் சந்தோஷம் தான்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காவல் நிலையத்தில் வேலை செய்து வரும் இரு பெண் காவலர்களுக்கு வளைகாப்பை நடத்தி முடித்து அசத்தியிருக்கின்றனர் பழனி காவல் நிலைய போலீசார். ஐந்து வகை சாதம் செய்து வளையல் அணிவித்து அட்சதை தூவி பெண் காவலர்கள் இருவரும் நல்ல முறையில் குழந்தை பெற்று எடுக்க மனமார வாழ்த்தி உள்ளனர்.
இந்த உலகத்திற்கு புதிய ஒரு உயிரை கொடுக்கும் மகத்தான தாய்மை பெண்களுக்கு மட்டுமே கடவுள் கொடுத்த ஒரு அற்புத வரம். 10 மாதங்கள் ஒரு குழந்தையை கருவில் சுமந்து உரு கொடுத்து உயிராக இந்த பூமியில் தருவதற்குள் பெண்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளால் அடக்கி விட முடியாது.

மேலும் கர்ப்ப காலங்களில் அதிகம் சுரக்கும் ஹார்மோன்களால் படபடப்பு ஒருவித அச்சம் ஆகியவை கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் அதனை சரி செய்வதற்காகவே வளைகாப்பு எனும் ஒரு அற்புத பெருவிழாவை தமிழ் முன்னோடிகள் இந்த உலகத்திற்கு அர்ப்பணித்துள்ளனர்.
வளைகாப்பு: முதன்முறையாக பிரசவத்திற்கு தயாராகும் பெண்களுக்கு எப்போதுமே ஒரு அச்ச உணர்வு இருக்கும் மேலும் மற்றவர்கள் கூறியதை கேட்டு பிரசவ வலி என்ற அந்த மறுபிறப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கும் நிலையில் பதற்றமும் பயமும் வருவது இயற்கை தான். அந்த பயத்தை போக்கி உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் வளையல் அணிவித்து சந்தனம் குங்குமம் தடவி அட்சதை தூவி வாழ்த்தும் ஒரு நிகழ்ச்சி தான் வளைகாப்பு.

பெண் காவலர்கள்: பொதுவாக கர்ப்பிணிகள் வீட்டில் இருந்து ஓய்வெடுப்பது தான் வழக்கம். ஆனால் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் கர்ப்ப காலத்தில் பணியாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஒரு சில பெண் காவலர்கள் பணி சூழல் காரணமாக பணியாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதே நேரத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக காவல் நிலையங்களில் சக காவலர்கள் வளைகாப்பு வைத்து வாழ்த்தும் சம்பவங்களும் நடைபெற்று வருவது வழக்கம் தான் அப்படி ஒரு சம்பவம் தான் பழனியில் நடைபெற்றிருக்கிறது.

ஸ்டேசனில் வளைகாப்பு: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் பெண் காவலர் பிரியா மேரி ஆகிய இரு காவலர்களும் கர்ப்பமாக உள்ளனர். இந்நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் சார்பில் இருவருக்கும் மகளிர் காவல் நிலையத்திலேயே இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

போலீசார் வாழ்த்து: இரு காவலர்களுக்கும் பழங்கள் மற்றும் சீர்வரிசை வைத்து, வளையல் அணிவித்து, 5 வகையான சாப்பாடு செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளை வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications