தானாய் கரைந்து போன தங்கம்? சபரிமலை டூ திண்டுக்கல்! ரவுண்டு கட்டி களத்தில் குதித்த கேரள போலீஸ்
திண்டுக்கல்: சபரிமலை ஐயப்பன் கோயிலில், தங்க நகை திருடப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கேரளாவில் புயலை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கேரள போலீசாரின் சிறப்பு விசாரணை குழு, திண்டுக்கல்லில் தனது விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள், கடந்த 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

4.54 கிலோ தங்கம் மாயம்
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, கவசங்களை ஒப்படைத்த போது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்ட பிறகு, சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்த போது அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது 4.54 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து முறைகேடுகளை முழுமையாக விசாரிக்க நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
9 அதிகாரிகள்
இதனிடையே 2019 ஆம் ஆண்டு, சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை, தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக அப்போதைய நிர்வாக அதிகாரி முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சஸ்பெண்ட் செய்தது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், இடைத்தரகாகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் பேத்தி, தேவஸ்வம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரி கைது
இந்த நிலையில், முன்னாள் தேவசம் வாரிய நிர்வாக அதிகாரி எஸ்.சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் 400 கிராம் தங்கம் எடுத்து அதை கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த தங்க வியாபாரி கோவர்தனிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து பல்லாரி சென்ற சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், தங்க வியாபாரி கோவர்தன் மற்றும் ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன தலைமை செயலதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோரை கைது செய்து திருவனந்தபுரம் அழைத்து சென்றனர்.
திண்டுக்கல்லில் விசாரணை
தற்போது அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், திண்டுக்கல்லில் ரவுண்ட் ரோடு அருகே உள்ள ராம்நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் எம்.எஸ்.மணி என்ற சுப்பிரமணியன் அலுவலகத்தில் காலை 12 மணி முதல் கேரளா சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை செய்தனர். மேலும், அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும் ஆய்வு செய்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்தவருக்கு சம்மன்
இதற்காக கேரளா துணைக் காவல் கண்காணிப்பாளர், எஸ்.எஸ்.சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மற்றும் ஆய்வு செய்தனர். மேலும் காலை 12 மணி அளவில் தொடங்கிய விசாரணை, மதியம் 2 மணி அளவில் முடிவடைந்தது. இந்த விசாரணைக்கு பின் கேரளா சிறப்பு புலனாய்வு போலீசார் நேரில் ஆஜராக சம்மன் வழங்கி சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட்
இதுகுறித்து எம்எஸ் மணி என்ற சுப்பிரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "கேரளா போலீசார் எதற்காக விசாரணை செய்தனர் என்று தெரியவில்லை. எனது நண்பர் பாலமுருகன் என்பவரது தொலைபேசி என்னை, நான் பயன்படுத்தி வருகிறேன். இந்த நம்பர் தொடர்பாகவே என்னிடம் விசாரணை செய்ய வந்துள்ளனர். நானும் எனது நண்பர் பாலமுருகனும் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம்.
கேரளா போலீசார் தேடி வந்த நபர் நான் இல்லை என்பதை அவர்களுக்கு தெரிவித்துவிட்டேன். அவர்கள் டி. மணி என்ற நபரை தேடி வந்துள்ளனர். என்னிடம் நேரில் ஆஜராக சம்மன் எதுவும் வழங்கவில்லை" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications