பார்பிக்யூ ஆசையால் பறிபோன உயிர்கள்! கும்மிருட்டில் புகை மூட்டம்.. காத்திருந்த எமன்! கொடைக்கானல் ஷாக்
திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தங்கும் அறையில் அடுப்பு கரி புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு இரண்டு சுற்றுலா இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கன் பார்பிக்யூ செய்து சாப்பிட்டுவிட்டு அடுப்பை அணைக்காமல் உறங்கியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது என்கின்றனர் போலீசார்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இயற்கை சூழ்ந்த பகுதிகளை கண்டு ரசிப்பதோடு அங்கேயே தங்கி இருந்து விடுமுறையை கழித்து வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருப்பதால் எப்போதும் அங்கு குளுமையான சூழல் நிலவுகிறது.
இதனால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணித்து வருகின்றனர். அதே நேரத்தில் போதைக்கு விருப்பப்பட்டு வரும் பயணிகளை குறி வைக்கும் கும்பலின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. சில சட்டவிரோத தங்கும் விடுதிகளில், இரவு நேரங்களில் ஃபாரஸ்ட் சபாரி எனப்படும் நள்ளிரவில் காட்டுக்குள் பயணிப்பது, வனப் பகுதியில் ஃபயர் கேம்ப் உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் உண்மையாகவே குடும்பத்துடன் கொடைக்கானலில் அழகை கண்டுகளிக்கவே வருகின்றனர். அவ்வாறு வரும் போது சுற்றுலாத் தலங்களை பார்த்து விட்டு, இரவு நேரங்களில் பார்பிக்யூ சிக்கனை தயார் செய்து விட்டு ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டத்துடன் கழிக்கின்றனர். அப்படி இரு இளைஞர்கள் இரவு நேரத்தில் குளிரை சமாளிக்க பார்ப்க்யூ சிக்கன் சாப்பிட்ட நிலையில், காலையில் அவர்கள் உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று திருச்சியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் சுற்றுலா வந்துள்ளனர். இங்குள்ள சின்னபள்ளதில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரண்டு அறை எடுத்து தங்கி உள்ளனர். மேலும் கொடைக்கானலில் உள்ள மதுபான கடையில் மதுபானம், பார்பிக்யூ செய்ய சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள், மேலும் அதனை தயார் செய்ய அடுப்பு கரி, மற்றும் அடுப்பு ஆகியவற்றை தயார் செய்து தங்கும் அறைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று நண்பகல் முதல் இரவு வரை விடாமல் மழை பெய்து வந்த நிலையில் கடும் குளிர் நிலவி வந்தது. இதனையடுத்து இந்த நான்கு இளைஞர்களும் நேற்று இரவு மது அருந்தி விட்டு , அடுப்பு கரியை கொண்டு தங்கும் அறையிலேயே பார்பிக்யூ சிக்கன் சமைத்துள்ளனர். பிறகு ஆனந்த பாபு, ஜெயகண்ணன் ஆகிய இருவரும் ஒரு அறையிலும் சிவசங்கர், சிவராஜ் ( சகோதரர்) ஆகிய இருவர் வேறு ஒரு அறையிலும் உறங்கியுள்ளனர்.
இதில் இரவு பார்பிக்யூ சிக்கன் சமயல் முடித்து விட்டு அந்த அடுப்பினை அணைக்காமல் தங்களது அறையியே குளிருக்காக அப்படியே விட்டு விட்டு உறங்கி உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று காலை அவர்களை எழுப்ப சென்ற போது அவர்கள் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து அவர்களை சோதித்த போது அந்த இருவரும் உயிர் இழந்ததாக தெரிந்தது.
அதனை தொடர்ந்து கொடைக்கானல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த போது நேற்று இரவு அடுப்பு கரி அமைக்காமல் அறையிலேயே வைக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து இறந்து போன அந்த இருவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே இது போல அடுப்பு கரி புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்த மூன்று சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications