முருகன் மாநாடு.. திண்டுக்கல்லில் என்ன நடந்தது.. மார்க்சிஸ்ட் கம்யூ, இந்து முன்னணி பாஜக மோதல் பின்னணி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார், முருகன் மாநாடு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகனுக்கு மண்டை உடைந்தது.
ஜூன் 22ஆம் தேதி மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற போகிறது. . இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மாநாடு குறித்து அண்மையில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பேசினார். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்று அவர் அழைப்பும் விடுத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இந்த மாநாட்டில் ஐந்து லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேநேரம் மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டினை வைத்து சதி நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, திமுக உள்பட ஆளும் கட்சி கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை முருகன் மாநாட்டை கடுமையாக விமர்சித்து வருகிறது.
முருகன் மாநாடு
இந்நிலையில், திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் 'மத்திய, மாநில அரசுகள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பிரச்சார இயக்கம்' என்ற பெயரில் கூட்டம் ஒன்று நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார், இந்து முன்னணி நடத்தும் முருகன் மாநாடு குறித்து கடுமையாக பேசினாராம். இது குறித்து தகவல் அறிந்து உடனேயே அங்கேயே வந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மார்க்சிஸ்ட் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி
அப்போது, அங்கு வந்த தாடிக்கொம்பு போலீஸார், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்திருக்கிறார்கள். இதனிடையே கைகலப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்க்சிஸ்ட் நிர்வாகி சரத் மற்றும் இந்து முன்னணி நிர்வாகி வினோத் ஆகியோர் காயம் காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
தாடிக்கொம்பு போலீஸ்
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு போலீஸார், இந்து முன்னணி அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் - பெங்களூரு நான்கு வழிச்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.
டிஎஸ்பி சிபின்சாய் சவுந்தர்யன்
இதையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபின்சாய் சவுந்தர்யன் விரைந்து வந்தார். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்துபோகச் செய்தார். அங்கு வந்த திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.பி ஆர்.சச்சிதானந்தம் நடந்த நிகழ்வு குறித்து கட்சியினரிடம் விசாரித்தார். தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும், இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி புகார்களை அளித்தனர்.
சரமாரி தாக்குதல்
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் நிர்வாகி சரத்குமாரை அவரது கட்சியினரும், இந்து முன்னணி நிர்வாகி வினோத்தை பார்க்க இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
பாஜக தலைவர் மண்டை உடைந்தது
இந்த மோதலில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக போலீஸார் இரு தரப்பினரையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினர். வெளியே வந்த பின்னரும் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது போலீஸார் தடுத்து அனுப்பி வைத்தனர். இரு தரப்பினர் மீதும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக திண்டுக்கல் நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications