திண்டுக்கல்லில் கல்யாண மண்டபத்தில் ஓடிப்போன மணமக்கள்.. ஒரு போன் காலால் ட்விஸ்ட்
திண்டுக்கல்: திருமண மண்டபங்களில் வரும் ஒரு வதந்தி திருமணத்தையே நிறுத்தும் வல்லமை கொண்டது.. திருமண மண்டபத்தில் மணப்பெண் குறித்து மனமார்ந்த குறித்த யாராவது வதந்தி கிளப்பினால் அந்த குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தி விடும். திருமண மண்டபங்களில் அதேபோல் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க போவதாக வதந்தி கிளப்பினாலும் கூட்டமாக மக்கள் ஓடி பீதியாகி விடுவார்கள்.. திண்டுக்கல் நகரில் நேற்று கல்யாண மண்டபத்தில் பரவிய ஒரு வதந்தி மணமக்களை மண்டபத்தை விட்டு ஓடி போக வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த ஒருவருக்கும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் ராமலட்சுமி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த புதன்கிழமை காலை நடைபெறுவதாக இருந்தது.

அப்போது மணமக்களின் உறவினர் ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், திருமணம் நடக்கும் மண்டபத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது வெடித்துவிடும். முடிந்தால் தப்பிச்செல்லுங்கள் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை அந்த நபர் துண்டித்துள்ளார்
இதைக் கேட்டு பதறிப்போன அந்த உறவினர் திருமண மண்டபத்திற்கு வந்திருந்த அனைவரிடமும் தெரிவித்தார். இதில் அதிர்ச்சியடைந்த மணமக்கள், உறவினர்கள் உடனே மண்டபத்தை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சேகர் தலைமையில் தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் மண்டபம் முழுவதும் சல்லடை போட்டு சோதனையிட்டனர். மோப்பநாய் ராக்கியும் அங்கு வரவழைக்கப்பட்டது. கல்யாண மண்டபம் முழுவதும் ஓடிச்சென்று மோப்பம் பிடித்தது. ஆனால் வெடிகுண்டு இருப்பதற்கான எந்தவித சைகையையும் அது காண்பிக்கவில்லை.
சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. அதன் பின்னரே போலீசாரும், மணமக்கள் மற்றும் குடும்பத்தினரும் நிம்மதியடைந்தனர். முன்னதாக திருமண மண்டபத்தில் வெடிகுண்டு சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே, மண்டபத்துக்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு மணமக்களை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அந்த கோவில் முன்பு நின்றபடியே மணமகளுக்கு மணமகன் தாலிகட்டி திருமணம் செய்துகொண்டார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருமணத்தை அந்த மணமக்கள் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள் என்று திருமண மண்டபத்திற்கு வந்திருந்த உறவினர்கள் பேசிக் கொண்டார்கள்.












Click it and Unblock the Notifications